
‘தக் லைஃப்’ திரைப்படம் ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ரிலீஸையொட்டி இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலும் ப்ரோமோஷனுக்காக படக்குழுவினர் சுற்றி வருகின்றனர். சென்னை சாய் ராம் கல்லூரியில் பிரமாண்டமாக தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த நிகழ்வில், ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்த கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் கலந்துகொண்டு பேசினார்.
நான் ஒரு தீவிர ரசிகன்
அப்போது, “இந்தப் படம் ஒவ்வொரு ரசிகர்களுக்கும் ஒரு ரசிகர் தருணம். கமலின் படங்களின் முதல் நாள் முதல் காட்சிகளைப் பார்ப்பவர்களில் நானும் ஒருவன். அவரது ஸ்டைல், கண்கள் என அவர் தொடர்பான அனைத்தும் எனக்குப் பிடிக்கும். நான் ஒரு தீவிர ரசிகன். கமல்ஹாசனுக்கு நான் எவ்வளவு பெரிய ரசிகர் என்பதை விளக்க ஒரு சம்பவத்தை கூறுகிறேன். நான் பலருடன் இதைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
அவ்வளவுப் பெரிய ரசிகன் நான்
ஒரு நாள், கமல் என் வீட்டிற்கு வந்து என் தந்தையிடம் பேசிக் கொண்டிருந்தார். நான் ஒதுங்கி நின்று அவரையேப் பார்த்துக் கொண்டிருந்தேன். பின்னர் அவர் என் தந்தையிடம், `நான் யார்’ என விசாரித்தார். என் தந்தை என்னை அறிமுகப்படுத்தினார். அவர் என் கைகளை குலுக்கினார். கட்டிப்பிடிக்கட்டுமா என அவரிடம் கேட்டேன். அவர் என்னைக் கட்டிப்பித்தார். அதன்பிறகு மூன்று நாள்கள் நான் குளிக்கவில்லை. அதற்கு காரணம் கமல்சார்தான்.

அவருடைய வாசனையும் மணமும் என் மீது இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அவ்வளவுப் பெரிய ரசிகன் நான். நாம் இருக்கும் வரை, இந்த உறவு ஒருபோதும் அழியாது.
கடந்த டிசம்பரில், எனக்கு அமெரிக்காவில் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கமல் சார் சிகாகோவில் இருந்தார். அவர் அப்போது என்னை அழைத்துப் பேசினார். அவர் கண்ணீர் மல்க என்னிடம் பேசியதாக சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. அந்த உணர்வு என் தந்தையைப் போல எனக்கு இருந்தது. நன்றி கமல்சார்” என்றார்.
தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், “சிவண்ணாவுக்கு நன்றி. நான் அவருடைய சித்தப்பா போன்றவன், ஆனால் அவரது பெயரே சிவண்ணா என்பதால், நான் என் சகோதரர் என்று அழைக்கிறேன். அவர் கன்னட சினிமாவில் ஒரு சூப்பர் ஸ்டார், ஆனால், கன்னட பிரதிநிதியாக, ரசிகராக இங்கு வந்துள்ளார். இத்தனை வருடங்களாக என்னுடன் பயணித்த உங்கள் அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என்றார்.