
சென்னை: பல்வேறு பிரச்சினைகளில் சிக்கிய போலீஸாரை மீட்கும் வகையில் அவர்கள் தொடர்பு கொள்ள தொலைபேசி எண்களை டிஜிபி வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: போலீஸாரின் மன நலனை உறுதி செய்யும் விதமாக தமிழக காவல்துறையில் ‘மகிழ்ச்சி’ என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டம் மூலம் மன அழுத்தம், தற்கொலை எண்ணம், மதுபழக்கம், ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாதல், மன அழுத்தம் மற்றும் பதற்றம், துக்கம், குடும்பம் மற்றும் திருமண முரண்பாடு, அதீத கோப மனப்பான்மை உள்ளிட்ட பல்வேறு வகையான பிரச்சினைகளில் சிக்கிய போலீஸாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மன நலனை மேம்படுத்துவதற்கு இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.