
`Group 1, 2 தேர்வுகளில் வெல்வது எப்படி?’
ஆனந்த விகடன் மற்றும் கிங் மேக்கர்ஸ் IAS அகாடமி இணைந்து ‘UPSC/TNPSC Group 1, 2 தேர்வுகளில் வெல்வது எப்படி?’ என்கிற தலைப்பில், நாமக்கல் ராசிபுரம் அருகே உள்ள பாவை பெண்கள் கலை அறிவியல் கல்லூரியில் இலவசப் பயிற்சி முகாமை நடத்தின.
ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு விகடன் இயர் புக் மற்றும் படிவம் வழங்கப்பட்டது. அதோடு, அவர்களுக்கு ஒருமணி நேரம் ஸ்காலர்ஷிப்புக்கான தேர்வும் நடத்தப்பட்டது.
மாணவ/மாணவிகள் ஆர்வமுடன் அந்த தேர்வை எழுதினர். கிங் மேக்கர்ஸ் IAS அகாடமி, பாவை கல்லூரி வளாகத்தையே நாமக்கல் மாவட்டத்துக்கான பயிற்சி கோர்ஸ் வழங்கும் இடமாக தேர்வு செய்து அறிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா, பாவை கல்விக் குழும தலைவர் CA.N.V நடராஜன், கிங் மேக்கர்ஸ் IAS அகாடமி சத்யஸ்ரீ பூமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு தன்னம்பிக்கை தரும்விதமாக உரையாற்றினார்கள். பாவை கல்விக் குழுமமும் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற அனைத்து உதவிகளையும் செய்தது.
முதலில், இந்த நிகழ்வில் பேசிய பாவை கல்விக் குழும தலைவர் CA.N.V நடராஜன்,
“நீங்கள் எந்த துறையைப் பற்றி வேண்டுமானாலும் படியுங்கள். சமூகம், அறிவியல், வரலாறு, புவியியல், சுற்றுப்புறச் சூழல், இந்திய பொருளாதாரம், சர்வதேச பொருளாதாரம் என்றுஅனைத்தையும் படியுங்கள். அவற்றை புரிந்து படித்து, அவற்றில் கைதேர்ந்தவர்களாக மாற வேண்டும்.

நம்மை எது தூங்கவிடாமல் துரத்துகிறதோ அதுதான் சிறந்த கனவு என்று சொல்வார்கள். அப்படி, ‘நான் ஐ.ஏ.எஸ் ஆவேன்…ஐ.ஏ.எஸ் ஆவேன்’ என்று சொல்லிக்கொண்டு படிக்கும்போது, ஒருநாள் அந்த இலக்கை உங்களால் எட்டிப் பிடிக்க முடியும்” என்றார்.
அடுத்து, இந்த நிகழ்வில் பேசிய சத்யஸ்ரீ பூமிநாதன்,
“வாழ்நாள் லட்சியமாக UPSC தேர்வுக்கு 1 லட்சம் மாணவர்களை அப்ளிகேஷன் போட வைக்க வேண்டும் என்பதை கொண்டுள்ளேன். என்னை மத்திய அரசு வேலைக்குப் போக வைத்தது, நான் படிக்கிற காலத்தில் மதுரையில் நடைப்பெற்ற இதுபோன்ற நிகழ்ச்சி தான்.

அதில் கலந்துகொள்ள போய், அரசு தேர்வுக்காக படிக்கும் ஆர்வம் வந்து, அரசு வேலைக்குப் போய் தற்போது, எண்ணற்ற ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், அரசு பணியாளர்களை உருவாக்கி வருகிறேன். அப்படி, உங்களில் பலருக்கும் இந்த நிகழ்ச்சி வாழ்க்கையில் ஏற்றத்தைக் கொண்டுவந்தால் மகிழ்ச்சி” என்றார்.
அடுத்து பேசிய நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் எஸ்.உமா,
“அரசுப் பள்ளியில் படித்து மருத்துவரான நான், நல்ல மகப்பேறு மருத்துவராக வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், அரசுப் பணியில் சேர்ந்து, அதன்பிறகு ஐ.ஏ.எஸ் ஆகி, தற்போது நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பல விசயங்களை மக்களுக்குச் செய்ய முடிகிறது. பெண்கள், தங்களுக்கு திருமணம் நடந்தாலும் அதை ஒரு தடையாக நினைக்க கூடாது. இந்த மாவட்டத்தில் வீட்டுக்கு வீடு அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள்.

ஆனால், நான் பிறந்த தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் அரசுப் பணிக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. அதனால், UPSC/TNPSC பயிற்சி அகாடமியை தென்மாவட்டத்திலும் தொடங்க வேண்டும்” என்றார். அதன்பிறகு, மறுபடியும் எழுந்து பேசிய சத்யஸ்ரீ பூமிநாதன்,
“ஆட்சியர் கோரிக்கையை ஏற்று அவர் பிறந்த தூத்துக்குடியிலேயே எங்களின் அடுத்த கிளையைத் தொடங்க இருக்கிறோம்” என்று அறிவித்து, ஆட்சியர் முகத்தில் உற்சாகத்தை வரவழைத்தார்.