
ரோஹித்தின் டெஸ்ட் போட்டி ஒய்வைத் தொடர்ந்து, ஜூன் மாதம் இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா, கே.எல். ராகுல் போன்ற சீனியர் வீரர்கள் இருந்தாலும் இந்த சுப்மன் கில்தான் தான் இந்திய அணியை வழிநடத்தப் போகிறார் என்று பலரும் கூறிவந்தனர்.
இப்போது அதை நிரூபிக்கும் வகையிலும், முன்பே கணித்ததை திட்டமிட்டதைப் போலவே நேற்று அறிவித்தார் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கார் நேற்று (மே 24) அறிவித்தார்.
மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட அணியில், ரிஷப் பண்ட்டை துணைக் கேப்டனாகவும் அறிவித்திருக்கிறார்.
கில்லை கேப்டனாக நியமித்தது குறித்து அகர்கார் விளக்கம் கொடுத்தாலும் கேள்விகள் எழாமல் இல்லை.
அதைவிட, ரிஷப் பண்ட்டை முதலில் டெஸ்ட் அணியில் எடுப்பார்களா என்று பலரும் நினைத்துக் கொண்டிருந்த வேளையில் துணைக் கேப்டனாக்கியிருப்பது பலருக்கு அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையம் கொடுத்திருக்கிறது.

ஏனெனில், 2024 டி20 உலகக் கோப்பை, பார்டர் கவாஸ்கர் தொடர், நடப்பு ஐ.பி.எல் என எதிலும் பண்ட் சரியாக ஆடவில்லை.
சாம்பியன்ஸ் டிராபியில் கூட 15 பேர் கொண்ட பட்டியலில் எடுத்தார்களே தவிர ஒரு போட்டியில் கூட களமிறக்கவில்லை. ஃபார்ம் தற்காலிகமானது, கன்சிஸ்டன்சிதான் முக்கியம்.
ஆனால், பண்ட் விஷயத்தில் அவரின் தேர்வே வித்தியாசமாக இருக்கிறது. இது மட்டுமல்லாமல், அணித் தேர்வில் மேலும் பல கேள்விகளும் இருக்கின்றன.
அதில் முக்கியமானது, உள்ளூர் போட்டிகளில் தொடர்ச்சியாகச் சிறப்பாகச் செயல்பட்டதால் நியூசிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் இடம்பிடித்து, ஒரு இன்னிங்ஸில் 150 அடித்து தன்னை நிரூபித்ததால் பார்டர் கவாஸ்கர் தொடர்க்கு அழைத்துச் செல்லப்பட்டு ஒரு போட்டியில் கூட இறக்காமல் அனுப்பப்பட்ட சர்ஃபராஸ் கானை தேர்வுக்குழு புறக்கணித்திருக்கிறது.

அகர்கார் விளக்கம்:
“சில நேரங்களில் நீங்கள் நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும். நியூசிலாந்துக்கெதிரான முதல் டெஸ்டில் சர்ஃபராஸ் சதமடித்தார்.
ஆனால், அதன்பிறகு ரன் குவிக்கவில்லை. எனவே, சில நேரங்களில் இதுபோன்ற முடிவுகளை அணி நிர்வாகம் எடுக்கும்.
அது ஒருவருக்கு நியாயமாக இருந்தாலும் சரி அல்லது ஒருவருக்கு அநியாயமாக இருந்தாலும் சரி, அவை அணியின் நலனுக்காக எடுக்கும் முடிவுகள்.
தற்போது, கடந்த இரண்டு சீசன்களில் கருண் நாயர் நிறைய ரன்கள் குவித்திருப்பதை நாங்கள் பார்க்கிறோம்.
தனது டெஸ்ட் கரியரின் தொடக்கத்தில் சில போட்டிகள் அவர் ஆடியிருக்கிறார். கவுண்டியிலும் ஆடியிருக்கிறார்.
போதுமான அளவு அவர் பேட்டிங் செய்கிறார் என்று நாங்கள் உணர்கிறோம்.

இப்போது விராட் இல்லாததால் அணியில் அனுபவமின்மை நன்றாகத் தெரிகிறது.
ஜெய்ஸ்வாலும் முதல்முறையாக இங்கிலாந்துச் சுற்றுப்பயணம் செல்கிறார். கில் அங்கு ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே ஆடியிருக்கிறார்.
இதற்கு முன்பு அங்கு ஒரு தொடரில் விளையாடியவர்கள் கே.எல். ராகுல், பண்ட் மட்டுமே. எனவே கருண் நாயரின் அனுபவம் உதவக்கூடும் என்று நாங்கள் உணர்ந்தோம்.
சில நேரங்களில் அது வேறு ஒருவருக்கு நியாயமற்றதாக இருக்கும். ஆனால், இறுதியில் முடிவுகளை எடுத்தாகத்தான் வேண்டும்”.
முரண்களும், கேள்விகளும்!
அகர்கார் இப்படிக் கூறினாலும், இதிலேயே அத்தனை முரண்களும் கேள்விகளும் எழுகிறது.
உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய கருண் நாயரை அணியில் எடுக்க, ஏற்கெனவே உள்ளூர் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டு அணியில் இடம்பிடித்து ஒரு போட்டியில் தன்னை நிரூபித்து, பின்னர் அடுத்த தொடரிலேயே வாய்ப்பளிக்காமல் பென்ச்சில் அமரவைக்கப்பட்ட சர்ஃபராஸ் கானைத்தான் நீக்க வேண்டுமா?
பண்ட் ஏற்கெனவே இங்கிலாந்தில் ஆடியிருக்கிறார் என்று விளக்கம் தந்தாலும் கடந்த ஓராண்டாக அவர் ஃபார்மில் இல்லையென்று தெரிந்தும், கண்கூடாக அதை ஐ.பி.எல்லில் பார்த்தும் துணைக் கேப்டனாக புரொமோஷன் கொடுத்து அணியில் எடுத்திருப்பது எந்த வகையில் நியாயம்?
அதேபோல், இங்கிலாந்து அனுபவம் பேசும் இவர்கள் இங்கிலாந்தில் ஒரேயொரு டெஸ்ட் போட்டி மட்டுமே ஆடிய கில்லை எப்படி கேப்டனாக்கினார்கள்?
மேலும், அணியில் கோலி இல்லாததால் அனுபவ வீரர் தேவை என்று கூறுபவர்களின் பார்வை ஏன் புஜாரா, ரஹானே ஆகியோர் பக்கம் திரும்பவேயில்லை?
வாய்ப்புக்காகப் போராடிப் போரடிப் தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கும் இளைஞனுக்கு கதவைத் திருந்துவிட்டு வாசற்படியோடு நிற்கவைத்து அனுப்புவதுதான் அணியின் நலனுக்காக எடுக்கப்படும் முடிவா?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் இருக்கிறதா என்பது தேர்வுக்குழுவுக்கு மட்டும்தான் என்பது வெளிச்சம்.
ஆனால், இதோடு சோர்ந்துவிடாமல் இவர்கள் நிராகரிக்கவே முடியாத அளவுக்கு இந்திய அணியின் கதவைத் தனது பேட்டால் இன்னும் பலமாக தட்டுவது மட்டுமே சர்ஃபராஸ் கானுக்கு இருக்கும் ஒரே வழி!
இந்த முடிவு குறித்த உங்கள் கருத்தை கமென்ட்டில் தெரிவியுங்கள்!