
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வந்த மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவடைந்துள்ளன. 5,003 பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள வைப்பாற்றங்கரையோரத்தில் ஏராளமான பழங்காலப் பொருட்கள் கிடைத்தன. அதையடுத்து, இப்பகுதியில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்ற தமிழக அரசு வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் அமைந்த வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் மேட்டுக்காட்டில் 2022-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி முதல் கட்ட அகழாய்வு பணிகளை தொடங்கியது. 2022 செப்டம்பர் வரை இப்பணிகள் நடைபெற்றன. நுண்கற்காலக் கருவிகள், பல வகையான பாசிமணிகள், சுடு மண்ணாலான காதணிகள், பொம்மைகள், தக்களி, சங்க கால வளையல்கள், மோதிரங்கள், சில்லு வட்டுகள், இரும்பு உருக்கு கழிவுகள், சங்கு வளையல்கள் என 3,254 பழங்காலப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.