
‘தேர்வுக்குழு ஆலோசனை!’
ஜூனில் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அங்கே 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவுள்ளது. விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற அணியின் சீனியர்கள் ஓய்வுபெற்ற பிறகு இந்திய அணி ஆடப்போகும் முதல் தொடர் இது. இந்திய அணியின் புதிய கேப்டன் யார்? இந்திய அணியின் புதிய ஓப்பனிங் கூட்டணி எது? விராட் கோலியின் நம்பர் 4 இடத்தில் இறங்கப் போகும் புதிய வீரர் யார்? போன்ற கேள்விகள் எழுந்திருந்தது.
இந்நிலையில், இந்திய அணியின் தேர்வுக்குழு மும்பையில் பிசிசிஐயின் தலைமை அலுவலகத்தில் கூடி அலோசனை செய்தது. ஆலோசனையின் முடிவில் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் அகர்கர் பத்திரிகையாளர் சந்தித்திருந்தார்.
அப்போது பேசிய அவர், ‘புதிய கேப்டனை அறிவிக்கும் போது, அடுத்த ஒரு தொடருக்கும் இரண்டு தொடருக்குமான கேப்டனை தேர்வு செய்ய முடியாது. நீண்ட கால அடிப்படையில்தான் யோசிக்க முடியும். அதன்படி,இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக கில்லை அறிவிக்கிறோம். கில் இளம் வீரர். டி20 யிலும் கேப்டனாக நன்றாக செயல்பட்டிருக்கிறார்.

இது அதிக அழுத்தமிக்க பணிதான். ஆனாலும், எங்களின் தேர்வு சரியானதுதான் என கில் நிரூபிப்பார் என நம்புகிறோம். அணியின் பேட்டிங் ஆர்டர் குறித்தெல்லாம் கில்லும் கம்பீரும் இணைந்து முடிவெடுப்பார்கள்.’ என்றார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரிஷப் பண்ட் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். மேலும், இந்திய அணியில் தமிழக வீரர்களான சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் இடம்பிடித்திருக்கின்றனர்.