
புதுச்சேரியில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமாரை எதிர்க்கட்சிகள் விடாது துரத்திக் கொண்டிருக்கின்றன. அவர் சம்பந்தப்பட்ட இடங்களில் சந்தனக் கட்டைகளும், போலி மது பாட்டில்களும் சிக்கியதே துரத்தலுக்கான துருப்புச் சீட்டு!
உளவாய்க்காலில் அமைச்சர் தரப்புக்குச் சொந்தமான தேனீ பண்ணை என்ற இடம் உள்ளது. இங்கு செயல்பட்டு வந்த தனியார் நிறுவனத்தில் கடந்த ஆண்டு 6 டன் சந்தனக் கட்டைகளை சேலம் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இவை சந்தன எண்ணெய் எடுப்பதற்காக கடத்திவரப்பட்டதாக அப்போது சொல்லப்பட்டது. அதேசமயம், “இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனது இடத்தை வாடகைக்கு எடுத்திருந்தவர்கள் இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறார்கள்” என அப்போது தேனீ ஜெயக்குமார் தன்னிலை விளக்கம் கொடுத்தார். இருந்தபோதும் அப்போது இந்த விவகாரத்தை அமைச்சருக்கு எதிராக ஊதிப் பெரிதாக்கி ஓய்ந்தன எதிர்க்கட்சிகள்.