
மணி ரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தக் லைப்’.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ஜூன் 5-ம் தேதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் படத்திற்கான புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த சிம்பு, விராட் கோலி உடனான சந்திப்பு குறித்து கலகலப்பாக பகிர்ந்திருக்கிறார்.
விராட் கோலி குறித்த பகிர்ந்த சிம்பு, “விராட்தான் அடுத்த சச்சின் என நான் முன்பே கணித்தேன். ஆனால், அவர் 2 வருடங்கள்தான் தாக்குப்பிடிப்பார் என்று பலரும் சொன்னார்கள். அதன்பின் விராட், பெரிய இடத்திற்கு வந்ததும் அவரை சந்திக்க நேர்ந்தது.
நம்ம சொன்ன பையன் இன்றைக்கு பெரிய ஆளாகிருக்கான். ஜாலியா போய் பேசுவோம் என அவரிடம் சென்று, ஹாய் சொன்னேன். நீங்கள் யார்? என்று கேட்டார், நான் சிம்பு என்றேன். ‘I don’t know you’ என்றார்.
‘ஒருநாள் நான் யார் என்பது உங்களுக்கு தெரிய வரும்.. அன்னைக்கு பாத்துக்குறேன்’ என நினைத்துக்கொண்டேன். அதேபோல சமீபத்தில் அவருக்கு ‘நீ சிங்கம் தான்’ பாடல் பிடிக்கும் எனச் சொல்லியிருக்கிறார். அதுவே வெற்றிதான்.

இப்பவும் அவருக்கு என்னை தெரியுமா? என்று தெரியவில்லை. அவர் சொன்னது அந்தப் பாட்டைத் தான். ஆனால் அந்த சந்திப்பு சம்பவத்தை மறக்கவே முடியாது” என்று சிரித்துக்கொண்டே நெகிழ்ச்சியாகப் பகிர்ந்திருக்கிறார்.