
புனேயில் உள்ள வன்வோரி என்ற இடத்தில் திறந்தவெளி மைதானத்தில் சன்ஸ்ருதி மற்றும் நரேந்திரா தம்பதிக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. அதன் அருகில் இருந்த ஹாலில் முஸ்லிம் திருமண ஜோடிக்கு திருமண வரவேற்பு நடந்து கொண்டிருந்தது. புனேயில் கடந்த சில நாட்களாக மழை பெய்து கொண்டிருந்தது. எனவே மழைபெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டன. மழை வந்துவிடுமோ என்ற கவலையில் சன்ஸ்ருதி குடும்பத்தினர் இருந்தனர்.
அவர்கள் எதிர்பார்த்தது போல முதலில் லேசான தூரல் பெய்தது. அதனை தொடர்ந்து பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. இதனால் திருமண சடங்களை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. திருமணத்திற்கு வந்தவர்கள் மழையில் இருந்து தப்பிக்க ஆங்காங்கே ஒதுங்க ஆரம்பித்தனர். மழை நின்றுவிடும் என்று சன்ஸ்ருதி குடும்பத்தினர் எதிர்பார்த்தனர். ஆனால் மழை நிற்பதற்கான அறிகுறி தென்படவில்லை. உடனே பக்கத்து ஹாலில் திருமண வரவேற்பு நடந்து கொண்டிருந்த முஸ்லிம் குடும்பத்திடம் இந்து குடும்பம் உதவி கேட்டது. சன்ஸ்ருதியின் மாமா சஞ்சய் பக்கத்து ஹாலில் திருமணம் நடந்து கொண்டிருந்த இடத்திற்கு சென்று அங்கிருந்த ஹாஜியிடம், `உங்களது ஹாலில் திருமண சடங்குகளை நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
உடனே அவர்கள் எந்த ஒரு கருத்தும் சொல்லாமல் முஸ்லிம் குடும்பத்தினர் இருவரும் பேசினர். அவர்கள் பேசி முடித்த பிறகு முஸ்லிம் தம்பதிக்கு திருமண வரவேற்பு நடந்த ஹாலில் சன்ஸ்ருதி தம்பதிக்கு திருமணம் செய்து வைக்க இடம் ஒதுக்கி கொடுத்தனர். முதலில் இந்து முறைப்படி சன்ஸ்ருதி தம்பதிக்கு திருமணம் நடந்தது. அதனை தொடர்ந்து முஸ்லிம் தம்பதியின் திருமண வரவேற்பு நடந்தது. இரு திருமண தம்பதியும் மேடையில் ஒன்றாக நின்று புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த காட்சி மத நல்லிணக்கத்தை பேணுவதாக இருந்தது.
இது குறித்து மணமகளின் தந்தை சேத்தன் கவாடே கூறுகையில்,” எதிர்பாராத நெருக்கடியின்போது முஸ்லிம் குடும்பம் நம்பமுடியாத கருணை காட்டியது” என்று குறிப்பிட்டார். இரண்டு வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த இரண்டு திருமணங்கள் ஒரே மேடையில் – இந்தியாவில் மட்டுமே நடக்க முடியும் என்று அவர் தெரிவித்தார். முஸ்லிம் குடும்பத்தினர் இந்து குடும்பத்தினரை தங்களது திருமண விருந்திலும் கலந்து கொள்ள செய்து விருந்து உபசாரம் செய்தனர்.