
கிரிக்கெட் உலகில் ஒரு காலத்தில் ஜெயசூர்யா, சங்ககாரா, ஜெயவர்தனே, தில்ஷன், சமிந்தா வாஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், குலசேகரா, முத்தையா முரளிதரன், மலிங்கா, அஜந்தா மெண்டிஸ், திசாரா பெரேரா என ஒரு வலிமையான படையுடன் மொத்த அணிகளுக்கும் சவாலளிக்கக்கூடிய அணியாகத் திகழ்ந்தது இலங்கை.
இந்தக் கோர் அணிதான் 2009 செப்டம்பர் 12-ம் தேதி சச்சின், டிராவிட் போன்ற சீனியர் வீரர்களும், தினேஷ் கார்த்திக், ரெய்னா, இஷாந்த் சர்மா போன்ற இளம் வீரர்களும் என அடங்கிய தோனி தலைமையிலான இந்திய அணிக்கெதிராக கொழும்புவில் களமிறங்கியது.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, ஜெயசூர்யா (98), திலின கண்டம்பி (91) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 50 ஓவர்களில் 307 ரன்களைக் குவித்தது.
இன்றைய காலத்தில் ஒருநாள் போட்டிகளில் 300+ என்ற டார்கெட் எளிதாகத் தெரியலாம்.
ஆனால், அந்த சமயத்தில் 300 ரன்கள் என்பதே எதிரணிக்கு கடினமான இலக்குதான்.
அத்தகைய கடினமான இலக்கை நோக்கி இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கும், சச்சினும் ஓப்பனிங் இறங்கினர்.
சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 100+ ரன்களுடன் நல்ல நிலையில்தான் இருந்தது.
இந்த நேரத்தில்தான், சர்வதேச கிரிக்கெட்டில் ஓராண்டு அனுபவம் மட்டுமே கொண்ட 21 வயது இளம் வீரர் அந்த மேஜிக்கை நிகழ்த்தினார்.

வரிசையாக ரெய்னா, டிராவிட், தோனி, யூசுஃப் பதான், ஹர்பஜன், நெஹ்ரா என ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
38 ஓவர்களில் வெறும் 168 ரன்களுக்குச் சுருண்டது இந்தியா. 6 ஓவர்கள் வீசி 20 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளிய அந்த வீரர்தான் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.
இந்த சம்பவம் நடந்து ஒரு தசாப்தத்துக்கும் மேலாகிவிட்டது. வீரரும் அதற்குப் பிறகு சுமார் 200 ஒருநாள் போட்டிகள், 100 டெஸ்ட் போட்டிகள், 90 டி20 போட்டிகள் ஆடிவிட்டார்.
மூன்று ஃபார்மெட்டிலும் மொத்தமாக 200 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திவிட்டார்.

ஆனாலும், அன்றைய போட்டியில் அவர் வீழ்த்திய 6 விக்கெட்டுகள்தான் இன்றும் அவரின் ஒருநாள் போட்டி கரியரில் பெஸ்ட் பவுலிங் இன்னிங்ஸாக இருக்கிறது.
இவர் வெறும் பவுலர் மட்டுமல்ல இலங்கையின் ஒன் ஆஃப் தி பெஸ்ட் ஆல்ரவுண்டரும் கூட. டெஸ்ட் போட்டிகளில் 8,000-க்கும் மேற்பட்ட ரன்களும் (ஒரு இரட்டை சத்தம் உட்பட 16 சதங்கள்), ஒருநாள் போட்டிகளில் 5,916 ரன்களும், டி20-யில் 1,416 ரன்களும் அடித்திருக்கிறார்.
ஒருநாள் போட்டியில் இவரின் ஃபேவரைட் அணிகூட இந்தியாதான் போல. ஏனெனில், ஒருநாள் போட்டிகளில் அவர் அடித்திருக்கும் மூன்று சதங்களும் இந்தியாவுக்கெதிராக மட்டும்தான்.
2009-ல் இந்தியாவை வீழ்த்திய அந்த கோர் அணியில் இவரைத் தவிர அனைவரும் எப்போதோ ஓய்வுபெற்றுவிட்டனர்.

இவர் மட்டும்தான், இன்னும் ஒரு வாரத்தில் 38 வயதைப் பூர்த்தி செய்யும் சூழலிலும் ஒரு சீனியர் வீரராக இன்றும் இலங்கை அணியில் விளையாடிவருகிறார்.
உலகப் புகழ்பெற்ற இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் கடைசியாக சதமடித்த இலங்கை வீரரும் இவர்தான் (2024).
அந்த வீரர்தான் ஏஞ்சலோ டேவிஸ் மேத்யூஸ்.
இந்த நிலையில், வரும் ஜூன் மாதம் சொந்த மண்ணில் பங்களாதேஷுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியோடு ஓய்வு பெறப்போவதாக மேத்யூஸ் அறிவித்திருக்கிறார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில், “சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு குட்பை சொல்ல வேண்டிய நேரம் இது. இலங்கைக்காகக் கடந்த 17 ஆண்டுகாலம் விளையாடியது எனக்குப் பெருமை.
தேசிய அணியின் ஜெர்சியை அணியும்போது ஏற்படும் தேசபக்தியுடன் வேறெதையும் ஒப்பிட முடியாது.
— Angelo Mathews (@Angelo69Mathews) May 23, 2025
கிரிக்கெட்டுக்காக அனைத்தையும் கொடுத்தேன். அதற்கு ஈடாக கிரிக்கெட் எனக்கு எல்லாமும் கொடுத்திருக்கிறது. இன்றிருக்கும் என்னை கிரிக்கெட்தான் உருவாக்கியது.
என்னுடைய கரியரில் உயர்வு, தாழ்வு அனைத்திலும் எனக்காக நின்ற இலங்கை ரசிகர்களுக்கு நன்றி.
ஜூன் மாதம் பங்களாதேஷுக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டிதான், இலங்கைக்காக என்னுடைய கடைசி ரெட் பால் கிரிக்கெட்டாக இருக்கும்.
டெஸ்ட் போட்டிகளிலிருந்து விடைபெறும் அதேநேரத்தில், என் நாட்டுக்குத் தேவைப்பட்டால் ஒயிட் பால் கிரிக்கெட் தேர்வுக்கு நான் தொடர்ந்து இருப்பேன்.
தற்போதைய டெஸ்ட் அணி, எதிர்கால மற்றும் நிகழ்கால ஜாம்பவான்கள் பலர் விளையாடும் திறமையான அணி என்று நான் நம்புகிறேன்.
நம் நாட்டுக்காக மிளிர ஒரு இளம் வீரருக்கு வழிவிட இதுவே சிறந்த நேரம் என்று தோன்றுகிறது.

எல்லாம் வல்ல இறைவன், எனது பெற்றோர், மனைவி, குழந்தைகள், குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மற்றும் எப்போதும் எனக்கு ஆதரவாக நின்ற அனைவருக்கும் நன்றி.
மேலும், எனது கரியர் முழுக்க எனக்கு ஆதரவாக இருந்த இலங்கை கிரிக்கெட் மற்றும் எனது பயிற்சியாளர்களுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்.
ஒரு அத்தியாயம் முடிந்தாலும், கிரிக்கெட் மீதான காதல் என்றும் நிலைத்திருக்கும்.” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.