
புதுடெல்லி: இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தம் சர்வதேச மத்தியஸ்தத்தால், குறிப்பாக அமெரிக்காவின் செல்வாக்கால் ஏற்படவில்லை என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மீண்டும் திட்டவட்டமாக கூறினார். நெதர்லாந்து ஊடகம் ஒன்றுக்கு எஸ்.ஜெய்சங்கர் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. ஏனென்றால் அந்த நடவடிக்கையில் ஒரு தெளிவான செய்தி இருந்தது. ஏப்ரல் 22-ம் தேதி நாம் கண்டது போன்ற செயல்கள் (பஹல்காம் தாக்குதல்) நடந்தால், அதற்கு பதிலடி தரப்படும் என்பதுதான் அது. போர் நிறுத்த முயற்சி மே 10-ம் தேதி பாகிஸ்தான் ராணுவத்தால் தொடங்கப்பட்டது. போரை நிறுத்த தயாராக இருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் ஹாட்லைனில் கூறியது.