
‘கம்பேக் கொடுத்த மும்பை!’
மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஆப்ஸில் காலடி எடுத்து வைத்திருக்கிறது. சீசனின் தொடக்கத்தில் அந்த அணியின் மீது நம்பிக்கையே இல்லை. மிக மோசமாக சீசனைத் தொடங்கியிருந்தார்கள். சென்னையோடு புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்துக்கு அடித்துக் கொண்டிருந்தார்கள்.
இப்போது ப்ளே ஆப்ஸூக்கு தகுதிபெற்றுவிட்டார்கள். முதல் இரண்டு இடங்களுக்குள் முடிக்கும் வாய்ப்பும் இருக்கிறது. இப்படி ஒரு அசாத்திய கம்பேக்கை எப்படி சாத்தியப்படுத்தியது மும்பை?
கடந்த சீசன் மும்பைக்கு மிக மோசமான சீசன். ரோஹித்திடமிருந்து கேப்டன்சி ஹர்திக்கின் கைக்கு வந்ததால் ரசிகர்களின் ஆதரவும் அணிக்கு இல்லை. இவர்களும் ஒரு அணியாக ஆடியிருக்கவில்லை. ரொம்பவே சொதப்பியிருந்தார்கள். அங்கே விட்ட இடத்திலிருந்துதான் இந்த சீசனைத் தொடங்குகிறார்களோ என்று தோன்றியது.

‘மோசமான தொடக்கம்!’
ஏனெனில், முதல் 5 போட்டிகளில் ஒன்றை மட்டுமே வென்றிருந்தனர். அந்த 5 போட்டிகளில் 3 போட்டிகள் அவே போட்டிகள் 2 போட்டிகள் உள்ளூர் போட்டிகள். சேப்பாக்கத்தில் நடந்த முதல் போட்டியிலேயே சென்னை அணியிடம் அடி வாங்கினார்கள். அடுத்து அஹமதாபாத்தில் நடந்த போட்டியில் குஜராத்திடம் அடி வாங்கினார்கள். மூன்றாவது போட்டியில்தான் வென்றார்கள். வான்கடேவில் கொல்கத்தாவுக்கு எதிரான அந்தப் போட்டியில் அவர்களை சிறிய ஸ்கோருக்குள் கட்டுப்படுத்தி வென்றார்கள்.
இந்த வெற்றி சீரானதாக இல்லை. லக்னோ மற்றும் பெங்களூருவுக்கு எதிரான அடுத்தடுத்தப் போட்டிகளில் தோல்வியையே தழுவினர். இந்த முதல் 5 போட்டிகளில் மும்பை டச்சிலேயே இல்லை. 4 போட்டிகளில் பும்ரா இல்லை. ரோஹித் பார்மில் இல்லை. இடையில் ஒரு போட்டியில் காயம் காரணமாக ஆடாமலும் இருந்தார். திலக் வர்மா ரிட்டையர் அவுட்டெல்லாம் ஆக வைத்திருந்தார்கள். லக்னோவுக்கு எதிரான போட்டியில் இன்டன்ட்டே இல்லாமல் தோற்றிருந்தார்கள்.

பெங்களூருவுக்கு எதிரான 5 வது போட்டியிலிருந்துதான் மும்பை வேகமெடுக்க ஆரம்பித்தது. அந்தப் போட்டியில் 200+ சேஸ். போட்டியை வெல்லவில்லை. ஆனால், ஒரு இன்டன்ட் காட்டியிருப்பார்கள். 280 ஸ்ட்ரைக் ரேட்டில் 42 ரன்களை எடுத்து போட்டியை நெருக்கமாகக் கொண்டு சென்றிருப்பார். அடுத்து டெல்லிக்கு எதிரான போட்டி. அந்தப் போட்டியில்தான் மும்பை பார்முக்கே வந்தது.
‘அந்த ஒரு போட்டி…’
முதலில் பேட் செய்த மும்பை அணி 205 ரன்களை எடுத்திருந்தது. ரையான் ரிக்கல்டன், சூர்யா, திலக் வர்மா, நமன் தீர் என மிடில் ஆர்டர் மொத்தமாக ஃபயர் ஆகியிருந்தது. ஆனாலும் போட்டி அவ்வளவு எளிதாக மும்பை பக்கமாக வரவில்லை. டெல்லிக்காக கருண் நாயர் கம்பேக் கொடுத்தார். கிட்டத்தட்ட 13 ஓவர்கள் வரைக்கும் போட்டி டெல்லியின் கையில்தான் இருந்தது. அதன்பிறகுதான் ட்விஸ்ட் நடந்தது.

இம்பாக்ட் ப்ளேயராக கரண் சர்மாவை அழைத்து வந்தார்கள். வந்த வேகத்தில் அவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். போட்டி அப்படியே மாறத் தொடங்கியது. டெத் ஓவரிலெல்லாம் மும்பையின் அத்தனை வீரர்களும் வெறியோடு இருந்தனர். கடைசி ஓவரில் மட்டும் 3 ரன் அவுட்கள். மும்பை அணி அந்தப் போட்டியை த்ரில்லாக வென்றது. அங்கே ஏறியதுதான் மும்பையின் கொடி. அதன்பிறகு இறங்கவே இல்லை.
‘மும்பை வெற்றி பின்னணி!’
ஹோம் அட்வாண்டேஜை சரியாக பயன்படுத்திக் கொண்டார்கள். எதிரணிக்கு ஏற்றார் போல பிட்ச்களை மாற்றி மாற்றி பயன்படுத்தினார்கள். சன்ரைசர்ஸூக்கு எதிரான போட்டியில் முழுக்க முழுக்க பௌலர்களுக்கு சாதகமான ஒரு பிட்ச்சை கொடுத்து அவர்களை 160 ரன்களுக்குள் சுருட்டி வென்றார்கள். அடுத்தப் போட்டியிலேயே சென்னைக்கு எதிராக பேட்டிங் பிட்ச்சை போட்டு 15 ஓவர்களிலேயே சேஸிங்கை முடித்து ரன்ரேட்டை ஏற்றிக்கொண்டார்கள்.
இந்தக் கட்டத்தில் ட்ரை சீரிஸ் போல ஒரு சூழலும் ஏற்பட்டது. அதாவது சென்னை, மும்பை, ஹைதராபாத் இந்த மூன்று அணிகளுக்குள்தான் அடுத்தடுத்து போட்டி இருந்தது. அதில் நன்றாக ஆடி வெல்பவர்கள்தான் ப்ளே ஆப்ஸில் நீடிக்க முடியும் எனும் நிலை. மும்பைதான் இந்த ரேஸில் முன்னிலை வகித்தது.
ரோஹித் பார்முக்கு வந்துவிட்டார். பெரிய இன்னிங்ஸ்களை ஆடி ஆட்டநாயகன் விருதை வென்றார். ரிக்கல்டன் நல்ல மொமன்ட்டம் கொடுக்க ஆரம்பித்தார். சூர்யா நல்ல பார்மில் இருந்தார். எல்லா போட்டிகளில் 25+ ரன்களை அடித்துக்கொண்டே இருந்தார். ரிட்டையர் அவுட் ஆன பிறகு, ஒரு வெறியில் திலக் வர்மா ஆட ஆரம்பித்தார். ஹர்திக் லோயர் மிடில் ஆர்டரில் வலுவாக இருந்தார்.

சஹாரும் போல்ட்டும் சில போட்டிகளில் பவர்ப்ளேயிலேயே எதிரணியை காலி செய்தனர். பும்ரா விக்கெட்டுகள் எடுத்ததோடு எக்கனாமிக்கலாகவும் வீசியிருந்தார். எக்கானமி 6 யை சுற்றித்தான் இருந்தது. சாண்ட்னர் ஸ்பின்னில் மாஸ்டர் க்ளாஸ் நடத்தினார். பேட்டிங்கில் சூர்யாவைச் சுற்றி மற்ற அனைவரும் கணிசமான பங்களிப்புகளைக் கொடுக்கின்றனர். பௌலிங்கில் பும்ராவைச் சுற்றி மற்ற பௌலர்கள் கலக்குகின்றனர்.
அந்த டெல்லி போட்டியிலிருந்து கரண் சர்மா, ட்ரென்ட் போல்ட், வில் ஜாக்ஸ், ரோஹித் சர்மா, ரையான் ரிக்கல்டன் என ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரர்கள் ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கிறார்கள். வில் ஜாக்ஸ் மட்டும்தான் 2 முறை ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார். மும்பை அணியின் சிறந்த பேட்டர் சூர்யகுமார்தான். ஆனால், அவரே 13 வது போட்டியில்தான் முதல் முறையாக ஆட்டநாயகன் விருதை வென்றார். அந்தளவுக்கு மும்பை அணியின் எல்லா வீரர்களும் வெற்றியில் பங்களிப்பு செய்து வந்தனர்.

அந்த டெல்லி போட்டிக்குப் பிறகு தொடர்ச்சியாக எல்லாமே வெற்றிதான். இடையில் குஜராத்துக்கு எதிரான போட்டியில் மழையால் பாதிக்கப்பட்டதால் நெருங்கி வந்து தோற்றிருந்தனர்.
சீசனை மோசமாகத் தொடங்குவதும், அதன்பிறகு கம்பேக் கொடுப்பதும் மும்பைக்கு ஒன்றும் புதிதல்ல. ‘Deliver when it’s matters’ என்பார்கள். மும்பை அணியினர் அதில் கைதேர்ந்தவர்கள். ப்ளே ஆப்ஸில் இருக்கும் மற்ற 3 அணிகள்தான் இனி கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
MI – யின் வெற்றிக்குக் காரணமாக நீங்கள் நினைக்கும் விஷயத்தைக் கமென்ட்டில் சொல்லவும்.