
புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் புதன்கிழமை இரவு காற்றுடன் பெய்த கனமழையினால் 2 பேர் உயிரிழந்தனர், 11 பேர் காயமடைந்தனர். மோசமான வானிலை காரணமாக 13-க்கும் மேற்பட்ட விமானங்கள் திருப்பி விடப்பட்டன.
புதன்கிழமை இரவு பலத்த காற்றுடன் டெல்லியில் கனமழை பதிவானது. அப்போது இரவு 7.50 மணி அளவில் தென்கிழக்கு டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் மின் கம்பம் சாலையில் சாய்ந்தது. அது அந்த வழியாக ட்ரை-சைக்கிளில் பயணித்த மாற்றுத்திறனாளி மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.