
பாகிஸ்தானின் முதன்மை உளவு அமைப்பான ISI-க்கு உளவு பார்த்ததாக 10-க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த மாதம் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஜோதி மல்ஹோத்ரா என்ற பெண் யூடியூபரும் ஒருவர்.
தற்போது 5 நாள்கள் காவல்துறை கண்காணிப்பில் இருக்கும் மல்ஹோத்ராவிடம், தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA), புலனாய்வுப் பிரிவு (IB) மற்றும் ஹரியானா காவல்துறை அதிகாரிகள் அடங்கிய கூட்டு குழு விசாரணையில் ஹரியானாவைச் சேர்ந்த இவர், இந்திய ரகசிய ஏஜெண்ட்கள் பற்றி தகவல்களைப் பகிர்ந்ததாக இந்தியா டுடே தெரிவிக்கிறது. அந்த விசாணையில் வெளியான தகவல்கள் என மேலும் சில தகவல்களும் வெளியாகியிருக்கின்றன.
மல்ஹோத்ரா மற்றும் ஐ.எஸ்.ஐ-யைச் சேர்ந்த அலி ஹசன் இடையிலான வாட்ஸஅப் தொடர்புகளை ஆராய்ந்ததில், இந்தியாவின் இரகசிய நடவடிக்கைகள் தொடர்பான குறியீட்டு (Coded) உரையாடல்களைக் கண்டறிந்திருப்பதாகவும்,
ஒரு செய்தியில் ‘அட்டாரி எல்லைக்கு வந்தபோது ரகசிய ஏஜென்ட்டுக்கு ஏதாவது சிறப்பு நெறிமுறைகள் வழங்கப்பட்டதை கவனித்தீர்களா?’ என ஹசன், மல்ஹோத்ராவிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த உரையாடலில் “நெறிமுறை” மற்றும் “ரகசிய முகவர்” போன்ற சொற்கள் குறிப்பிட்ட விதத்தில் பயன்படுத்தப்படுவது, இந்திய அதிகாரிகளின் சந்தேகத்தை வலுக்கச் செய்துள்ளது.
மல்ஹோத்ரா தெரிந்தே இந்திய ரகசிய ஏஜென்ட்களை காட்டிக்கொடுக்க செயல்பட்டாரா அல்லது ஐ.எஸ்.ஐ-யின் பரந்த வலைப்பின்னலின் ஒரு பகுதியாக மேனிபுலேட் செய்யப்பட்டு ஆட்டி வைக்கப்பட்டாரா என்பதை உறுதிபடுத்தும் நோக்கில் விசாரணை நடந்து வருகிறது
மல்ஹோத்ரா 2023-ம் ஆண்டு சீக்கியர்களின் விழாவான வைசாகி திருவிழாவைக் காண முதல்முறையாக பாகிஸ்தான் சென்றுள்ளார். அது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.