
சென்னை: வாக்குச்சாவடி முதல்நிலை முகவர்கள் பயிற்சி முகாம், டெல்லியில் வரும் 22 மற்றும் 23-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இம்முகாமில் தமிழகத்தில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முதல்நிலை முகவர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் தமிழகத்தில் இருந்து பங்கேற்கும் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில், திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி, தேசிய மக்கள் கட்சி ஆகிய 12 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் திமுக சார்பில் எம்.எம்.அப்துல்லா, அதிமுக சார்பில் சி.வி.சண்முகம் பங்கேற்றனர்.