
கிறிஸ்தவ நாட்டுப்புறக் கதையை மையமாக வைத்து உருவான படம் ‘ஞான சவுந்தரி’. அரசன் தர்மரின் மகள் ஞான சவுந்தரி. அவரை கொடுமைப்படுத்துகிறார், அவரது சிற்றன்னை. ஒரு கட்டத்தில் தனது ஆட்களை அனுப்பி, ஞான சவுந்தரியைக் காட்டுக்குக் கடத்திச் சென்று கொன்றுவிடுமாறு கூறுகிறார். அவர்கள், ஞான சவுந்தரியின் இரு கைகளையும் வெட்டி விட்டுத் தப்பிக்கின்றனர். உயிருக்குப் போராடும் அவரை, வேட்டைக்கு வரும் பக்கத்து நாட்டு இளவரசன் பிலேந்திரன் காப்பாற்றுகிறான். பிறகு அவரை திருமணம் செய்துகொள்கிறான். இயேசு கிறிஸ்து மற்றும் கன்னி மேரியின் ஆசீர்வாதங்களுடன் அவர்கள் எப்படி மகிழ்வாக வாழ்கிறார்கள் என்று கதை செல்லும்.
நவாப் ராஜமாணிக்கம் நடத்திய மேடை நாடகத்தைத் தழுவி இந்தப் படம் உருவாக்கப் பட்டது. இதே கதையைத் தழுவி ஏ.நாராயணன் 1935-ம் ஆண்டு, ‘ஞான சவுந்தரி’ என்ற பெயரில் படமாக இயக்கினார். அதில் பி.எஸ். ஸ்ரீனிவாச ராவ் கதாநாயகனாகவும் சரோஜினி நாயகியாகவும் நடித்தனர். அதே கதையைக் கொண்டு 13 வருடங்களுக்கு பிறகு உருவான இந்த ‘ஞான சவுந்தரி’யில் டி.ஆர்.மகாலிங்கம், எம்.வி.ராஜம்மா, டி.பாலசுப்பிரமணியம், பி.ஆர்.மங்கலம், பி.எஸ்.சிவபாக்யம், பி.ஜி.வெங்கடேசன் என பலர் நடித்தனர்.