
மும்பை: பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டினை விளக்குவதற்காக பல்வேறு வெளிநாடுகளுக்குச் செல்ல இருக்கும் பிரதிநிதிகள் குழுவினை மாப்பிள்ளை ஊர்வலத்துடன் ஒப்பிட்டுள்ள சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) எம்.பி. சஞ்சய் ரவுத், இண்டியா கூட்டணி இதனைப் புறக்கணிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும், சிவ சேனா (ஷிண்டே பிரிவு) ஸ்ரீகாந்த் ஷிண்டே எதனைப் பிரதிநிதித்துவப்படுத்துவார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்திய இந்தியா – பாகிஸ்தான் மோதலில், இந்தியாவின் நிலைப்பாட்டினை விளக்கவும், பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக குற்றம்சாட்டி பாகிஸ்தான் மீதான அழுத்தத்தை அதிகரிக்கவும் அனைத்துக் கட்சிகளின் எம்.பி.கள் அடங்கிய 7 பிரதிநிதிகள் குழுக்களை முக்கியமான வெளிநாடுகளுக்கு அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது.