
அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த மோசடி இப்போது பரவலாகிவிட்டது.
`கார்டு மேலே இருக்கும் 16 நம்பர் சொல்லு…’ `உன் பேங்க் அக்கவுண்ட் லாக் ஆயிடுச்சி’ என அறைகுறை தமிழில் பேசியவர்களிடமிருந்து எப்படிப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனப் பல்வேறு விழிப்புணர்வு எச்சரிக்கைகள் வழங்கப்பட்டது. தற்போது ட்ரெண்டிங்கில் இருப்பது ‘டிஜிட்டல் கைது’ மோசடி.
`உங்களுக்கும் போதை கும்பலுக்கும் தொடர்பிருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது’, ‘வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதப் பணம் வந்திருக்கிறது’, ‘உங்கள் கணக்கிலிருந்து தீவிரவாதிகளுக்குப் பணம் சென்றிருக்கிறது’ எனப் பல்வேறு காரணங்களுடன் காவல்துறை அதிகாரி போலப் பேசி பணம் பறிக்கும் கும்பலும் அதிகமாகிவிட்டது.
இதிலிருந்து மக்களைப் பாதுகாக்க மக்களின் செல்போன் அழைப்புகளின் ட்ரிங் ட்ரிங் ஓசைக்குப் பதிலாக ‘காவல்துறை போல உங்களிடம் பேசி மோசடியில் ஈடுபடலாம்’ எனக் கேட்டுக் கேட்டு சலிப்பூட்டும் வகையில் அரசு விழிப்புணர்வு காலர் ட்யூனாகவே அதை மாற்றிவிட்டது.
இப்போது அதையும் கடந்து குப்பையில் தூக்கிப்போடப்படும் பார்சல் அட்டைப்பெட்டி மூலம் மோசடி நடப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
ஆன்லைன் ஷாப்பிங்:
டீத்தூள் முதல் ஐபோன் வரை ஆன்லைனில் ஆர்டர் செய்வது ஆடம்பரம் என்பதைக் கடந்து அத்தியாவசியம் எனக் கருதும் சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.
அப்படி ஆன்லைன் ஷாப்பிங் போர்டல்களில் இருந்து பொருட்களை ஆர்டர் செய்யும்போது, அவற்றை அட்டைப்பெட்டியில் வைத்தோ அல்லது கவரில் வைத்தோ பேக் செய்து அனுப்புவார்கள்.
அதை அன்பாக்ஸ் செய்வதையே வீடியோவாகப் பலர் பதிவிட்டிருப்பார்கள்.
அப்படிப் பொருள்களை அட்டைப்பெட்டியிலிருந்தோ, கவரிலிருந்தோ எடுத்தற்குப் பிறகு அந்தப் பெட்டியை, கவரை குப்பையில் தூக்கி எறிந்துவிடுவோம் அல்லவா… அங்கிருந்து தொடங்குகிறது மோசடி.

எப்படி மோசடி நடக்கிறது?
உங்களுக்கு பார்சல் வருகிறது என்றால் பொருளை அனுப்பும் நிறுவனம் அந்தப் பார்சல் பெட்டியில் உங்களின் முகவரி, இமெயில் ஐடி, செல்போன் எண் உள்ளிட்ட தகவல்களைப் பதிவிட்டிருக்கும்.
அதுமட்டுமில்லாமல் உங்கள் ஆர்டரின் விவரங்களுடன் பெட்டியில் மோசடியாளர்களால் யூகிக்க முடியுமான உங்களைப் பற்றிய நிறையத் தரவுகள் இருக்கும்.
எனவே, மோசடி செய்பவர்கள் உங்களைத் தங்கள் வலையில் சிக்க வைக்க அவற்றைப் பயன்படுத்துகிறார்கள், இதன் மூலம் நீங்கள் பணத்தை இழக்க நேரிடும்.
எப்படி?
உதாரணமாக மோசடி செய்பவர்கள் உங்கள் பற்றிய தரவுகள் இருக்கும் பெட்டியை எடுக்கிறார்கள் என்றால், அவர்கள் அந்த விவரங்களைப் பயன்படுத்தி உங்களை அழைத்து, வாங்கிய புதுப் பொருள் பற்றிய கருத்தைக் கேட்பார்கள்.
உங்கள் அடுத்த ஆர்டரில் கூடுதலாக 10% அல்லது அதற்கு மேற்பட்ட தள்ளுபடியைப் பெற நீங்கள் உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டு ஒரு லிங்கை அனுப்புவார்கள்.
ஆப்பர் என்றதும் அந்த லிங்கை கிளிக் செய்பவர்கள் சிக்கிக்கொள்கிறார்கள். அடுத்த சில நிமிடங்களில் உங்கள் வங்கியில் இருக்கும் பணம் காணாமல் போகும்.
பாதுகாப்பாக இருப்பது எப்படி?
இதுபோன்ற மோசடிகளிலிருந்து தற்காத்துக்கொள்ள முதலில், உங்கள் டெலிவரி பெட்டிகளிலிருந்து உங்கள் விவரங்கள் இருக்கும் அந்தக் காகிதத்தைக் கிழித்து எடுத்துவிட்டு அட்டைப்பெட்டிகளைத் தூக்கி எறியுங்கள்.
அட்டைப்பெட்டியின் மீதே எழுதப்பட்டிருக்கிறது என்றால், அதைக் கத்திப் போன்ற கூர்மையான பொருள் மூலம் கிழித்துவிடலாம்.
இரண்டாவதாக, இதுபோன்ற தள்ளுபடிகளுக்கு ஒருபோதும் இரையாகாதீர்கள். உங்களுக்குத் தெரியாதவர்களால் பகிரப்பட்ட இணைப்புகளைக் கிளிக் செய்யாதீர்கள்.
ஒருவேளை மோசடி நடந்துவிட்டதாக உணர்ந்தாலோ, அல்லது மோசடியாளர்கள் எனச் சந்தேகம் வந்தாலோ சைபர் கிரைம் காவல்துறைக்கு உடனடியாக தொடர்புகொண்டு புகார் பதிவு செய்யுங்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb