
டாஸ்மாக்கில் நடைபெற்ற ரூ.1,000 கோடி ஊழல் வழக்கு விவகாரத்தில் 2-வது நாளாக நேற்றும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. சோதனையில் சொத்து பத்திரங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சோதனையின் போது டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் உள்பட 3 பேரை அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று நேரில் விசாரணை நடத்தினர்.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடி ஊழல் வழக்கு தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீடு உள்பட சென்னையில் 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். சென்னை மணப்பாக்கம் சி.ஆர்.புரத்தில் உள்ள விசாகன் வீடு, ஆழ்வார்பேட்டை கே.பி.தாசன் சாலையில் உள்ள சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு, சூளைமேடு ராஜகீழ் வீதியில் உள்ள தனியார் மதுபான நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வரும் மேகநாதன் வீட்டில் சோதனை நடத்தினர்.