
பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டி சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருக்கிறது. மழையினால் போட்டி தாமதமாகியிருக்கிறது. டெஸ்ட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு விராட் கோலி ஆடப்போகும் முதல் போட்டி இது.
அதனால் இந்தப் போட்டிக்கு முன்பாக பலரும் விராட் கோலியின் டெஸ்ட் கரியரிரை பற்றிய தங்களின் அபிப்ராயங்களை பகிர்ந்திருந்தனர். அதில் வர்ணணையாளர் ஹர்ஷா போக்லே, கோலி குறித்து பகிர்ந்த விஷயங்கள் முக்கியமானதாக இருந்தது.
ஹர்ஷா போக்லே பேசுகையில், “விராட் கோலி கேப்டனாக இரண்டு முக்கியமான விஷயங்களை செய்தார். இளம் வீரர்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டும் மிகச்சிறந்ததுதான் என்பதை உணர்த்தினார்.
ஒரு கேப்டனாக தன்னைச் சுற்றி வேகப்பந்து வீச்சாளர்களை வைத்துக் கொண்டு வென்றார். இது அதற்கு முந்தைய இந்திய கேப்டன்கள் செய்திடாதது.
2014 -ல் அடிலெய்டில் கேப்டனாகவும் பேட்டராகவும் கோலி ஆடிய விதத்தை மறக்கவே முடியாது. நான்காவது இன்னிங்ஸில் 370 ரன்களை சேஸ் செய்ய வேண்டும். அடிலெய்டில் அதற்கு வாய்ப்பே இல்லை. ஆனாலும் கோலி சேஸூக்கு ஆக்ரோஷமாக சென்றார். அந்தப் போட்டியை வெறும் 48 ரன்களில் இந்தியா தோற்றது. ஆனால், அணிக்கு ஒரு புது உத்வேகத்தை கொடுத்தார்.
ராகுல் டிராவிட்டிடம் முன்பு ஒரு முறை பேசிக்கொண்டிருந்தேன். அப்போது, டி20 க்களாக ஆடப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தில், கோலி மாதிரியான இளம் வீரர் டெஸ்ட் ஆட முன் வந்தால் இன்னும் இரண்டு தலைமுறைக்கு இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் உயிர்ப்போடு இருக்கும்” என்றார்.
மேலும் அவர் பேசுகையில், “இதோ இப்போது கில்லும் ஜெய்ஸ்வாலும் வந்துவிட்டார்கள். கோலி அவர்களிடம் பேட்டனை கொடுத்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டின் மகத்துவத்தை கோலி உணர்த்தாவிடில் இந்த வீரர்கள் இந்தியாவுக்காக டெஸ்ட் ஆட வந்திருப்பார்களா என தெரியாது. டெஸ்ட் கிரிக்கெட் நீண்ட காலமாக அபாய நிலையில் இருக்கிறது. அதற்கு விராட் கோலி மாதிரியான தூதுவர்கள் ரொம்பவே முக்கியம்.” என்றார்.