
பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருக்கிறது. மழையின் காரணமாக போட்டியின் டாஸ் தாமதமாகியிருக்கிறது. ஒருவேளை, மழை விடாது பெய்யும்பட்சத்தில் என்ன நடக்கும்? ஓவர்களை எப்படி குறைப்பார்கள்?
‘ப்ளே ஆப்ஸ் வாய்ப்பு!’
இந்தப் போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமான போட்டி. இந்தப் போட்டியில் வெல்லும்பட்சத்தில் பெங்களூரு அணி முதல் அணியாக ப்ளே ஆப்ஸூக்கு தகுதிப்பெறும். கொல்கத்தா வெல்லும்பட்சத்தில் இன்னும் அந்த ப்ளே ஆப்ஸ் வாய்ப்பில் நீடிக்கும். ஒருவேளை மழை முழுவதுமாக பெய்து போட்டி கைவிடப்படும்பட்சத்தில் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் கொடுக்கப்படும். அப்போது கொல்கத்தா அணி தனது ப்ளே ஆப்ஸ் வாய்ப்பை இழக்கும்.
மழையினால் போட்டியில் ஓவர்கள் குறைக்கப்படும்பட்சத்தில், எப்படி குறைக்கப்படும்? அதற்கான விதிகள் என்ன?
வழக்கமாக ஐ.பி.எல் போட்டிகளில் 7 மணிக்கு டாஸ் போடப்பட்டு 7:30 மணிக்கு போட்டி தொடங்கும். மழையினால் போட்டி பாதிக்கப்பட்டு 7 மணிக்கு டாஸ் போட முடியவில்லையெனில், 7:15 க்குள்ளாவது டாஸ் போடப்பட வேண்டும். அப்படியெனில்தான் 7:30 மணிக்கு போட்டி தொடங்கும். தாமதமானால் திட்டமிட்டப்படி போட்டி தொடங்காது. கொஞ்சம் தாமதமாகும்.

8:45 மணி வரைக்கும் ஓவர்களை குறைக்கமாட்டார்கள். மழையினால் பாதிக்கப்படும் போட்டிகளுக்கு கூடுதலாக 1 மணி நேரம் வழங்கப்படும். மேலும், மழையினால் பாதிக்கப்படும் போட்டிகளுக்கு இன்னிங்ஸ் பிரேக் 20 நிமிடத்திலிருந்து 10 நிமிடமாகக் குறைக்கப்படும். 8:45 க்குள் டாஸ் போடப்பட்டு போட்டி தொடங்கப்பட்டுவிட்டால் முழுமையாக 20 ஓவர் போட்டி நடைபெற்றுவிடும்.
8:45 மணிக்கு மேலும் மழை விடவில்லை அல்லது பிட்ச் தயாராகவில்லையெனில், 8:45 மணிக்கு மேலாக ஒவ்வொரு 4 நிமிடங்கள் 25 நொடிகளுக்கும் ஒவ்வொரு ஓவராகக் குறைக்கப்பட்டுக் கொண்டே வரும்.
அதாவது, 8:49 க்கு ஆட்டம் தொடங்கினால் 19 ஓவர் ஆட்டமாக நடைபெறும். 8:53 க்கு தொடங்கினால் 18 ஓவர் ஆட்டமாக நடைபெறும்.

இந்த அடிப்படையில் கடைசி கட் ஆப் டைம் 10:56 ஆகும். இரவு 10:56 மணிக்குள் டாஸ் போடப்பட்டு போட்டிக்குத் தயாராகிவிட்டால் 5 ஓவர் போட்டியை நடத்தி முடித்துவிடுவார்கள். ஐ.பி.எல்-இல் ஒரு போட்டியில் முடிவை எட்ட குறைந்தபட்சமாக 5 ஓவர் போட்டியையாவது நடத்த வேண்டும்.
பெங்களூருவில் மைதானத்தில் மழை நீரை வெளியேற்ற நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாகவும், மழை நின்றால் 45 நிமிடத்தில் போட்டியை நடத்திவிடலாம் என்கிறார்கள்.