
நீட் தேர்வின் முடிவுகள் வரும் ஜூன் 14-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மத்திய பிரதேசத்தில் மாணவி ஒருவர் தொடர்ந்த வழக்கால் நீட் தேர்வின் முடிவுகள் வெளியிடக்கூடாது என்று மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.
முன்னதாக கடந்த 4-ம் தேதி, சென்னை ஆவடி மையத்தில் 464 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினார்கள். மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில், அன்று பெய்த கனமழையால் மதியம் 3 மணியில் இருந்து மாலை 4.15 மணி வரை அந்த மையத்தில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த மையத்தில் தேர்வு எழுதிய மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அந்தத் தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 13 மாணவர்கள் ‘நீட் மறு தேர்வு’ நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் மத்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஏ.ஆர்.எல் சுந்தரேசன், இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்கவும், மாணவர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதற்கும் கால அவகாசம் வேண்டும் என்று வாதாடினார்.
இதையடுத்து, ‘அதுவரை நீட் தேர்வின் முடிவுகளை வெளியிடக் கூடாது’ என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.