
ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனியை வரவேற்க அல்பேனியா நாட்டு பிரதமர் எடி ராமா சிகப்பு கம்பளத்தின் மீது மண்டியிட்டு வரவேற்ற காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.
ஐரோப்பிய அரசியல் சமூகத்தின் கூட்டம் வெள்ளிக்கிழமை (மே 16) அன்று அல்பேனியாவின் டிரானாவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட 40-க்கும் மேற்பட்ட உலக அரசியல் தலைவர்களை அல்பேனிய பிரதமர் எடி ராமா புன்னகையுடன் வரவேற்றார்.
இந்த கூட்டத்தின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன்பாக அல்பேனிய பிரதமர் எடி ராமா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ஐரோப்பா முழுவதும் இன்று வந்துள்ள இடத்திலிருந்தும், உலகம் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கும் இடத்திலிருந்தும், நான் உங்களுக்கு வணக்கம் சொல்கிறேன்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
அதன்படி இத்தாலிய பிரதமர் மெலோனி வந்ததும், எடி ராமா சிகப்பு கம்பளத்தின் மீது தரையில் மண்டியிட்டு வரவேற்றார். அவர் அடிக்கடி தனது இத்தாலிய தோழிக்காக வரவேற்பு செய்வது போலவே, இத்தாலிய பிரதமரை வரவேற்றார். சிவப்பு கம்பளத்தின் மீது ஒரு முழங்காலில் மண்டியிட்டு மரியாதைக்குரிய வணக்கத்தை வழங்கினார். பிறகு அவரை அரவணைத்து கூட்டத்திற்கு அனுப்பி வைத்தார். இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரிதும் பகிரப்பட்டு வருகிறது.
2030 ஆம் ஆண்டுக்குள் அல்பேனியாவை ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் கொண்டு செல்வதாக உறுதிமொழி எடுத்து பிரச்சாரம் செய்து இருந்தார் எடி ராமா. அதன் அடிப்படையில் அவர் மீண்டும் நான்காவது முறையாகப் அல்பேனியா பிரதமராக பதவி ஏற்றார். தனது மகத்தான மறுதேர்தல் வெற்றியில் மகிழ்ச்சியடைந்து, தொகுதி மற்றும் அதற்கு அப்பால் உள்ள நண்பர்களை வரவேற்பதில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்த உயர்மட்ட உச்சிமாநாடு அல்பேனியாவை ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் கொண்டு செல்வதை வெளிப்படுத்த ஒரு சரியான மேடையாக அமைந்தது. இதனை அவர் பயன்படுத்திக் கொண்டு உள்ளார்.

இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த எடி ராமா, “ நான் அவர்களில் மிக உயரமானவன் என்பது உண்மைதான், ஆனால் நான் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றான ஒரு நாட்டை வழி நடத்துகிறேன். மேலும் இந்த உச்சிமாநாட்டை நடத்தும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்திருப்பது எங்களுக்கு பெரிய மரியாதையை கொடுத்து இருக்கிறது” என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.