
பிரபல சினிமா தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் என்பவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேனாம்பேட்டை கே.பி.என் தாசன் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
தனுஷ் நடிக்கும் இட்லிக்கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி, சிம்புவின் 49-வது படம் ஆகியவற்றை தயாரித்து வருபவர் ஆகாஷ் பாஸ்கரன்.
இவர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் எனக் கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த ஆகாஷ் பாஸ்கரன் திருமணத்தை முதலமைச்சர் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் இருவரும் முன் நின்று நடத்தி வைத்தனர்.
உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி, அன்பில் மகேஷ் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர். தனுஷ், நயன்தாரா, அனிருத், சிவகார்த்திகேயன், அட்லி, தமிழரசன் பச்சமுத்து, விக்னேஷ் சிவன், ஆர்.ரவிக்குமார் உள்ளிட்ட திரைப்பிரலங்கள் பலரும் இத்திருமண விழாவில் கலந்துகொண்டனர்.
யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன்?
சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று கனவுடன் திரைப்படங்களில் பணியாற்றி, பின்பு ‘Dawn Pictures’ தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிவர் ஆகாஷ் பாஸ்கரன்.
இவர் `கவின்கேர்’ குழுமத்தின் நிறுவனர் சி.கே.ரங்கநாதனின் மூன்றாவது மகள் தாரணியை திருமணம் முடித்திருக்கிறார். ‘கவின்கேர்’ நிறுவனத்தைப் பார்த்துக் கொள்வது மட்டுமின்றி, தனிக்கெனத் தனியாக ‘moonbakes’ நிறுவனத்தையும் ஆரம்பித்து நடத்தி வருகிறார் ஆகாஷின் மனைவி தாரணி.