
நாகப்பட்டினம் அருகே உள்ளது ஒரத்தூர். இங்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அதிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் நேற்று மதியம் திடீரென புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.
இதை கண்டு அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்தனர். இந்திர நினைவு குடியிருப்பு திட்டத்தில் கட்டப்பட்ட வீட்டை டாஸ்மாக் கடை திறப்பதற்கு ஏற்ற வகையில் மாற்றி கடை திறந்ததும் அப்பகுதியினரை வேதனைகுள்ளாக்கியது. வீட்டில் டாஸ்மாக் திறப்பதற்கு டாஸ்மாக் அதிகாரிகள் எப்படி அனுமதி கொடுத்தனர் என்பதும் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது, “டாஸ்மாக் கடையை திறக்காதே, ஏழைகள் வாழ்வை அழிக்காதே, இளைஞர்களின் எதிர்காலத்தை வீணாக்காதே, டாஸ்மாக் கடையை மூடும் வரை போராடுவோம், சாகும் வரை போராடுவோம்” என்று கோஷங்கள் எழுப்பினர். இதையறிந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து அப்பகுதியினரிடம் பேசினோம், “எங்க ஊரில் பல ஆண்டுகளாக சாராயம் விற்பனையில் யாரும் ஈடுப்பட்டது கிடையாது. இதையே எங்களுடைய அடையாளமாக்கி வாழ்ந்து வருகிறோம். பல கிராமங்களில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டும் எங்கள் ஊரில் டாஸ்மாக் வராமல் பார்த்துக்கொண்டோம். இந்த நிலையில், நேற்று திடீரென புதிய டாஸ்மாக் கடையை திறந்தனர்.

இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட தொகுப்பு வீட்டை டாஸ்மாக் கடை நடத்துவதற்கு எப்படி அனுமதி கொடுத்தார்கள் என தெரியவில்லை.
வீட்டு உரிமையாளர் ஒப்புதல் அளித்தாலும் அதிகாரிகள் வீட்டை கடையாக மாற்றுவதற்கு அனுமதி அளித்திருக்க கூடாது. எங்க பகுதி மக்கள் இப்போது வரை நிம்மதியாக வாழ்கிறார்கள்.
இங்கு திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக்கால் நிச்சயம் எங்களுடைய நிம்மதி பறிபோகும். எனவே ஊரின் நலனுக்காகவும், மக்களின் வாழ்க்கை வளம் பெறவும் இங்கு திறக்கப்பட்ட டாஸ்மாக்கை நிரந்தரமாக மூட வேண்டும். அதுவரை எங்கள் போடாட்டம் தொடரும்” என்றனர்.