
நீலகிரி கோடை விழாவின் மிக முக்கிய நிகழ்வான ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 127 – வது மலர் கண்காட்சி இன்று காலை (15- 05 – 2025 ) தொடங்கி மே மாதம் 25 – ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இந்த மலர் கண்காட்சியின் சிறப்பம்சங்களாக சோழ மன்னர்களின் சிறப்பை பிரதிபலிக்கும் விதமாக 2 லட்சம் வண்ண கொய்மலர்களை கொண்டு பொன்னியின் செல்வன் கோட்டை மாதிரி மற்றும் அரண்மனை நுழைவு வாயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதுதவிர கரிகாலன் கல்லணை, அரியணை, ஊஞ்சல், படை வீரர்கள், யானை, அன்ன பறவை, ரதம் உள்ளிட்ட பல்வேறு அலங்கார வடிவங்களை சுமார் 7 லட்சம் கார்னேசன் மலர்களைக் கொண்டு வடிவமைத்துள்ளனர்.
5 நாள் பயணமாக நீலகிரி மாவட்டத்திற்கு வருகைத் தந்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை
ரிப்பன் வெட்டி மலர் கண்காட்சியை தொடங்கி வைத்திருக்கிறார். மனைவியுடன் வருகைத் தந்திருந்த முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மலர் அலங்காரங்களைப் பார்வையிட்டார்.

ஆயிரக்கணக்கான மலர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் அரியணையில் அமர்ந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், ‘ உதயசூரியனுக்கு ஓட்டுப் போடுங்க’ என பூங்காவில் இருந்தவர்களிடம் கேட்டுக் கொண்டார். மலர் அரியணையில் அமர்ந்து 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது கவனம் பெற்று வருகிறது.