
‘மீண்டும் தொடங்கும் ஐ.பி.எல்’
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தால் ஐ.பி.எல் போட்டிகள் ஒரு வார காலத்துக்கு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. வருகிற மே 17 ஆம் தேதி முதல் மீண்டும் போட்டிகள் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில், மாற்று வீரர்கள் சம்பந்தமாக புதிய விதிமுறை ஒன்றை ஐ.பி.எல் நிர்வாகம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
வழக்கமாக ஒரு சீசனில் ஒரு அணியின் 12 லீக் போட்டி வரைக்கும் ஒரு அணியால் மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்துகொள்ள முடியும். அந்த வீரர்களை அடுத்தடுத்த சீசன்களுக்கு ரீட்டெய்னும் செய்து கொள்ள முடியும். அந்த வகையில் பெரும்பாலான அணிகள் இந்த சீசனில் 12 போட்டிகளில் ஆடிவிட்டதால் மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்வதற்கான காலக்கெடு முடிந்துவிட்டது.
‘அணிகளின் பிரச்னை!’
ஆனால், எஞ்சியிருக்கும் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு தாமதமாக தொடங்குவதால் பல வெளிநாட்டு வீரர்களாலும் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பட்லர், ஸ்டார்க், ஹேசல்வுட், ரூதர்போர்டு போன்ற முக்கியமான வீரர்களே போட்டிகளை தவறவிடுகின்றனர். இதனால் பெரும்பாலான அணிகள் பாதிப்படைகின்றன.

இதற்கு தீர்வு காணும் வகையில் ‘Temporary Replacement’ என்ற பெயரில் தற்காலிகமாக மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்ய அணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இப்படி தற்காலிகமாக ஒப்பந்தம் செய்யும் வீரர்களை அடுத்த சீசனுக்காக ரீட்டெய்ன் செய்ய முடியாது.