
26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில், பாதுகாப்பு படையினர் உள்பட 27 பேர் உயிரிழந்தனர். இந்த ஷெல் தாக்கதலால் பூஞ்ச் மாவட்டத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இதில், 12 வயது இரட்டையர்கள், ஒரே சமயத்தில் உயிரிழந்துள்ளனர்.
2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 அன்று 5 நிமிட இடைவெளியில் பிறந்த இந்த இரட்டையர்கள் நடைமுறையில் பிரிக்க முடியாதவர்களாக உள்ளனர்.
பூஞ்ச் மாவட்டத்தின் மண்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவர் ரமீஷ், இவரது மனைவி உர்ஷா.
இந்த தம்பதிக்கு, 2014 ஏப்ரல் 25 அன்று 5 நிமிட இடைவெளியில் உர்பா பாத்திமா, ஜைன் அலி என்ற இந்த இரட்டையர்கள் பிறந்தனர். சமீபத்தில் நடந்த பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலில், இந்த இரட்டையர்கள் சில நிமிட இடைவெளியில் கொல்லப்பட்டுள்ளனர்.
அவர்களின் தாய் மாமா `அதில் அடில் பதான்’ இந்தியன் எக்ஸ்பிரஸ் பேட்டியில் இது குறித்து கூறுகையில்,
“இரண்டு மாதங்களுக்கு முன்பு ரமீஸ், உர்ஷா கானுடன் இரண்டு குழந்தைகளும் பூஞ்சில் வாடகைக்கு குடிபெயர்ந்தனர். மே 7 ஆம் தேதி காலை 6.30 மணிக்கு நான் அவர்களை அழைத்துச் செல்வதற்காக வந்த போது, கடுமையான ஷெல் தாக்குதல் நடந்தது.

விரைவாக செல்ல வேண்டும் என்பதற்காக, நான் அவர்களை வெளியே வரச் சொன்னேன். அவர்கள் வெளியே வந்த நேரத்தில் பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் இரட்டையர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும் ரமீஸ்-க்கு காயம் ஏற்பட்டது. நான் மூவரையும் என் வாகனத்தில் ஏற்றி பூஞ்ச் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன், அங்கு குழந்தைகள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் சில நிமிட இடைவெளியில் இறந்தனர்” என்று அடில் அங்கு நடந்த தாக்குதல் குறித்து கூறினார்.