
கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நியாயமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பு வழக்கறிஞர் சுரேந்திர மோகன் கூறினார். கோவையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: இந்த வழக்கில் 376டி (கூட்டு பாலியல் வன்கொடுமை) மற்றும் 376 (2)என் (தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை புரிதல்) ஆகிய பிரிவுகளில் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சிபிஐ முயற்சி வீண் போகவில்லை.
பாதிக்கப்பட்ட பெண்கள், வழக்கின் தன்மை, பாதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, நீதிமன்றம் நியாயமானத் தீர்ப்பு வழங்கியுள்ளது. இவ்வழக்கில் அழிக்கப்பட்ட சில மின்னணு ஆவணங்கள் தொழில்நுட்ப வல்லுநர்களால் மீட்டெடுக்கப்பட்டன. சாட்சிகள் சிபிஐ தனிக் குழுக்கள் மூலம் ரகசியமாக விசாரிக்கப்பட்டனர்.உயர்நீதிமன்ற உத்தரவின்படி 8 வழக்குகள் ஒன்றாக விசாரிக்கப்பட்டன. வழக்கில் விசாரிக்கப்பட்ட 48 சாட்சியங்களில் யாரும் பிறழ் சாட்சியாக மாறவில்லை.