
`டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்று வருகிறது.
அந்நிகழ்வில் பேசிய சசிகுமார், “ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
இந்தப் படம் வெற்றி அடைந்ததால் என்னுடைய சம்பளத்தை ஏற்றிவிடுவீர்களா என்று பலரும் கேட்கிறார்கள்.
சம்பளம் ஏறாது. அதே சம்பளம்தான். பல ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கு இப்படி ஒரு வெற்றி கிடைத்திருக்கிறது.
இதை என்னுடைய வெற்றியாக நான் நினைக்கவில்லை. சசிகுமார் ஜெயித்து விட்டார், தயாரிப்பு நிறுவனம் ஜெயித்து விட்டது என்று நினைக்காதீர்கள்.
புது இயக்குநர்களுக்கும், தோல்வி அடைந்த இயக்குநர்களுக்கும் ஒரு நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது இந்தப் படம்.
நாம் தோல்வி அடைந்தால், ஆமாம் நான் தோல்வி அடைந்துவிட்டேன் என்று அந்தத் தோல்வியை ஒத்துக்கொள்ள வேண்டும். எனது தோல்வியை ஒவ்வொரு முறையும் நான் ஒத்துக்கொண்டேன்.
இந்தப் படம் வெளியான முதல் நாள் கிட்டத்தட்ட இரண்டரைக் கோடிதான் வசூலித்தது. என்னுடைய ஒரு படம் மொத்தமாகவே இரண்டரைக் கோடிதான் வசூல் செய்தது. ஆக என்னுடைய ஒரு படம் இரண்டரைக் கோடிக்கும் ஓடி இருக்கிறது.
இன்னொரு படம் பல கோடிக்கும் ஓடி இருக்கிறது. நான் நடித்த படங்களில் ‘சுந்தர பாண்டியனும்’, ‘குட்டிப்புலியும்’தான் அதிக வசூல் செய்த படங்கள்.
ஆனால் இன்று இந்த `டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் அதனை முறியடித்திருக்கிறது. அதனால் இனி வருபவர்களுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுங்கள்.

‘சுந்தர பாண்டியன்’ படத்தில் உங்களை எல்லோருக்கும் எப்படிப் பிடித்ததோ அதேபோல இந்தப் படத்தில் வரும் தர்மதாஸ் கதாபாத்திரமும் எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொன்னார்கள்.
அதே மாதிரி நான் தியேட்டருக்குச் சென்று பார்த்தபோது நல்ல வரவேற்பு இருந்தது. நல்ல படம் கொடுத்தால் குடும்பத்துடன் தியேட்டருக்கு மக்கள் வருவார்கள் என்பதைத் தெரிந்துகொண்டேன்” என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…