
சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.6 லட்சத்தை இழந்த வங்கி ஊழியர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89 ஆக உயர்ந்துள்ளது. இந்த உயிரிழப்புகள் எப்போது தடுத்து நிறுத்தப்படும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கை: சென்னை புழலை அடுத்த புத்தகரம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்ற தனியார் வங்கி ஊழியர் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.6 லட்சத்திற்கும் கூடுதலாக பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். முருகனை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.