
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றியை பாஜக கொண்டாடும் வகையில் நாடு முழுவதிலும் ‘திரங்கா யாத்ரா (கொடி யாத்திரை)’ நடத்துகிறது.
காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் ஏப்ரல் 22-ல் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இதில், அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இந்திய அரசு, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்நடவடிக்கையில் ராணுவத்தின் துணிச்சலை எடுத்துச் சொல்லவும், அவர்களின் சாதனைகளை பட்டியலிடவும் பாஜக முடிவு செய்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் யாத்திரையில், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களையும் எதிர்கொள்ள பாஜக தயாராகிறது.