
ரஷ்யா – உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் போரை முடிப்பது குறித்து சமீபத்தில் பேசியுள்ளார் விளாதிமிர் புதின்.
இதற்கு பதிலளித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யா இறுதியாக, போருக்கு முற்றுப்புள்ளிக்கு நடவடிக்கைகளை எடுக்க முன்வருவது மகிழ்ச்சியளித்தாலும், எந்தவொரு அமைதிப் பேச்சுவார்த்தைக்கும் முன்னர் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
ரஷ்யா போர் நிறுத்தம் குறித்துப் பேசுவதை நேர்மறையானதாக கருதும் ஜெலன்ஸ்கி, “மொத்த உலகமும் இதைக் கேட்பதற்காக நீண்டகாலம் காத்திருக்கிறது, எந்த ஒரு போரையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முதல்படி போர் நிறுத்தம்தான்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த மே 8ம் தேதி முதல் மே 10 வரை, 3 நாட்கள் போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தது ரஷ்யா. ஆனால் அந்த போர் நிறுத்தம் சரியாக பின்பற்றப்படவில்லை என உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
உக்ரைன் அதிகாரிகள், போர் நிறுத்தத்தை அறிவித்த சில மணிநேரங்களுக்குள்ளாகவே ரஷ்யா அதனை மீறியதாகத் தெரிவித்துள்ளனர்.
ஜெலன்ஸ்கி இந்த போர் நிறுத்தம் ரஷ்யாவின் வெற்றி தின பிரச்சாரத்துக்கான ‘நாடக நிகழ்ச்சி’ என விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

போருக்கு முடிவுகட்ட வேண்டுமெனில், முதலில் போர் நிறுத்தம் வேண்டும் என்ற ஜெலன்ஸ்கியின் அழைப்பை மறுத்துவிட்டார் புதின். அதற்கு பதிலாக மே 15ம் தேதி இஸ்தான்புல்லில் உக்ரைனுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தும் திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.