
கன்னியாகுமரி: தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் மருதமலையில் 184 அடி உயரத்திலும், ஈரோடு மாவட்டம், திண்டலில் 180 அடி உயரத்திலும், இராணிப்பேட்டை மாவட்டம், குமரகிரி திமிரியில் 114 அடி உயரத்திலும் முருகன் சிலைகள் அமைக்கப்பட உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோடு அருள்மிகு மகாதேவர் திருக்கோயில், மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழாக்களில் கலந்து கொண்ட பி.கே.சேகர்பாபு, 1000 ஆண்டு பழமையான பத்மநாபபுரம் அருள்மிகு நீலகண்ட சுவாமி திருக்கோயிலில் ரூ. 1.93 கோடி மதிப்பீட்டிலான 9 திருப்பணிகளையும், இரணியலில் அமைந்துள்ள தொன்மை வாய்ந்த அரண்மனையை ரூ.4.85 கோடி மதிப்பீட்டில் புதுப்பித்திடும் வகையிலான திருப்பணிகளையும், சுசீந்தரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி திருக்கோயிலில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் திருக்குளம் சீரமைத்தல் மற்றும் கருங்கல் தரைதளம் அமைக்கும் பணிகளையும் தொடங்கி வைத்தார்.