
புதுடெல்லி: பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க உடனடியாக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக இருவரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதத்தில், "உடனடியாக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதலில் அறிவித்த போர் நிறுத்தம் குறித்து மக்களும் அவர்களது பிரதிநிதிகளும் விவாதிப்பது மிகவும் முக்கியம். இது எதிர்கால சவால்களைச் சந்திப்பதற்கான நமது கூட்டுத் தீர்மானத்தை நிரூபிக்க ஒரு வாய்ப்பாகவும் இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.