
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்து வரும் மோதலில் இரு தரப்பிலிருந்தும் இழப்புகளும் தாக்குதல்களும் தொடர்ந்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் இரு நாடுகளும் சூழலை கட்டுக்குள் கொண்டுவர கோரிக்கை முன்வைக்கின்றன.
இந்த நிலையில், இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் நேற்று இந்தியா – பாகிஸ்தான் தூதரகங்களுக்கு வெளியே மனித உரிமைகள் குழு ‘இரு நாடுகளுக்கும் நடந்து வரும் பதட்டங்களை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை ஊக்குவிக்க வேண்டும்” என்றக் கோரிக்கையுடன் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறது.
மனித உரிமைகள் மற்றும் அமைதி சங்கத் தலைவர் கிருஷ்ணா பஹாடி மற்றும் HURPES தலைவர் ரேணுகா பவுடெல் தலைமையில் இந்த போராட்டங்கள் நடந்தது. இந்தப் போராட்டத்தின் போது, “போரில் யாரும் வெல்ல மாட்டார்கள், மனிதகுலம் மட்டுமே தோற்கடிக்கப்படும்”
“பயங்கரவாதம் எல்லா நேரங்களிலும் வருந்தத்தக்கது” – “அமைதியில் அனைவரும் வெற்றி பெறுவார்கள்” – “தெற்காசியாவை போர் இல்லாத மண்டலமாக மாற்றுவோம்” போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை போராட்டக்கரர்கள் ஏந்திச் சென்றனர்.
மற்றொரு புறம் இரு நாடுகளையும் கண்டிக்கும் வகையிலான பதாகைகளும் இருந்தன. உதாரணமாக “சிந்து நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்துவது எவ்வளவு சட்டபூர்வமானது?” – “பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளைத் தாக்கியவர்களை பாகிஸ்தான் ஏன் பாதுகாத்தது?”
“பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் ஏன் பயங்கரவாதத்தை வளர்க்கிறது?” போன்ற வாசகங்களும் இருந்தன. மேலும், இந்தப் போராட்டத்துக்கு இடையே இந்தியா அரசுக்கும் – பாகிஸ்தான் அரசுக்குமான கடிதங்கள் காத்மண்டுவில் இருக்கும் இந்திய தூதரகத்திடம் வழங்கியது.