• May 10, 2025
  • NewsEditor
  • 0

பழம்பெரும் பாலிவுட் கதாசிரியர் மற்றும் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் நடிகை ஷபானா ஆஸ்மியை திருமணம் செய்து கொண்டுள்ளார். தமிழில் வைரமுத்துவின் பாடல்கள் போன்று இந்தியியில் ஜாவேத் அக்தரின் பாடல்கள் மிகப் பிரபலம். ஜாவேத் அக்தர் எந்த ஒரு விசயத்தையும் வெளிப்படையாக பேசக்கூடியவர். ஆரம்பத்தில் மது பழக்கத்திற்கு அடிமையான ஜாவேத் அக்தர் பின்னர் அதிலிருந்து மீண்டு விட்டார்.

மது பழக்கம் குறித்து ஜாவேத் அக்தர் `சத்யமேவ ஜயதே’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது பகிர்ந்து கொண்டார். அவர் இது தொடர்பாக அளித்த பதிலில், ”நான் எனது 19வது வயதில் மது அருந்த ஆரம்பித்தேன். நான் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மும்பைக்கு வந்தபோது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்த ஆரம்பித்தேன். அதுவே எனக்கு பழக்கமாகிவிட்டது. ஆரம்பத்தில் என்னிடம் பணம் இல்லாமல் இருந்தது.

ஷபானா ஆஸ்மியுடன்

பாலிவுட்டில் எனக்கு வேலைகள் கிடைத்து, பணபுழக்கம் அதிகரித்தபோது தினமும் ஒரு பாட்டில் மது குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன். இதற்காக என்னுடன் யாரும் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் அருகில் நண்பர்கள் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். மது அருந்த யாரையும் நான் துணைக்கு தேடுவதில்லை. ஒரே நேரத்தில் 18 பாட்டில் பீர் வரை குடிப்பேன். இதனால் எனது கொழுப்பு அதிகரித்து தொப்பை அதிகமானது.”என்று தெரிவித்தார்.

ஜாவேத் அக்தரின் மது பழக்கத்தை எப்படி நிறுத்தினேன் என்பது குறித்து அவரது மனைவி ஷபானா ஆஸ்மி கூறுகையில், ”தொடர்ந்து மது அருந்தினால் நீண்ட நாள் வாழ முடியாது என்று அவருக்கு தெரியும். அதோடு மது பழக்கத்தால் வேலையையும் சரியாக செய்ய முடியாது என்று தெரியும். நாங்கள் லண்டனில் இருந்தபோது அவர் மது அருந்தியிருந்தார். உடனே, `கடவுளே இது மோசமான பயணமாக இருக்கப்போகிறது’ என்று அவரிடம் சொன்னேன். உடனே அவர் காலை உணவு தயார் செய்யும்படி என்னிடம் கேட்டுக்கொண்டார். நான் காலை உணவு தயார் செய்து கொடுத்தேன். அதனை சாப்பிட்ட பிறகு, இனி நான் மது அருந்தமாட்டேன் என்று சொன்னார்.

ஜாவேத் அக்தர்

அவரது வார்த்தைகளை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். நான் எதுவுமே சொல்லவில்லை. என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டேன். இனி நான் குடிக்கப்போவதில்லை என்று தெரிவித்தார். இதற்கு முன்பு அவர் இது போன்று சொன்னதில்லை. ஆனால் அன்றையில் இருந்து அவர் மதுவை தொட்டதில்லை. அவரிடம் இருந்த மன உறுதி என்னிடம் இருக்குமா என்று தெரியவில்லை. அவரது மன உறுதியை என்னால் நம்பமுடியவில்லை”என்று தெரிவித்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *