
புதுடெல்லி: ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை மறுத்து விளக்கம் அளித்துள்ள இந்திய அரசு, பதற்றத்தை அதிகரிக்க பாகிஸ்தான் மென்மேலும் முயற்சி செய்தால், அதற்கு களத்தில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக புதன்கிழமை அதிகாலை பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் ஏவுகணைகளை வீசி அழித்தது. இதன் தொடர்ச்சியாக, இந்திய எல்லை கிராமத்தினர் மீது தாக்குதல், இந்திய ராணுவ நிலைகளைக் குறிவைக்கும் நடவடிக்கைகளில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருவதும், இவற்றுக்கு இந்திய ராணுவ தரப்பில் பதிலடி கொடுப்பதும் தொடர்ந்து வரும் சூழலில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை தொடரும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.