
காஞ்சிபுரம் ஆயுதப்படை மைதானத்தில் இரும்பு தகரங்கள் மூலம் அமைக்கப்பட்ட தடுப்புச் சுவர் உடைந்த நிலையில் கிடக்கிறது. முறையான தடுப்புச் சுவர் இல்லாததால் சம்பந்தமில்லாத பலர் இந்த மைதானத்துக்குள் நுழைவதால் முறையான தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
இதன் அருகே காவலர் பயிற்சி பள்ளி அமைந்துள்ளது. புதிதாக காவலர்கள் தேர்வு செய்யப்பட்டால் இந்த பயிற்சிப் பள்ளியில் தங்கி இருப்பர். அங்குள்ள மைதானத்தில் புதிய காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். காவல் துறையினருக்கு தேவையான அடிப்படை பயிற்சிகள், முதலுதவி பயிற்சி, சாமர்த்தியத்தை வளர்க்கும் பயிற்சி உட்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்த மைதானத்தை சில நேரங்களில் காவல்துறை சார்பில் நடைபெறும் விழாக்களுக்கும் பயன்படுத்துகின்றனர்.