இன்றைக்கு படித்து நல்ல வேலையில் இருப்பவர்கள் கூட விவசாயம் பக்கம் எட்டிப்பார்க்க ஆரம்பித்துள்ளனர். சிலர் லட்ச ரூபாய் சம்பளம் தரும் கார்ப்ரேட் வேலையை உதறிவிட்டு விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சத்தீஷ்கர் மாநிலம் கொண்டகாவ் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜாராம் திரிபாதி. இவர் இரண்டு முனைவர் பட்டம் பெற்று இருக்கிறார். படித்து முடித்தவுடன் எஸ்.பி.ஐ வங்கியில் வேலை கிடைத்தது. ராஜாராமின் தந்தைக்கு 30 ஏக்கர் நிலம் இருந்தது. அதில் அவரது தந்தை விவசாயம் செய்து வந்தார். ஆனால் ராஜாராமுக்கு தனது தந்தையின் வேலையை செய்ய வேண்டும் என்று விருப்பம் ஏற்பட்டது.

இதையடுத்து தனது மனைவியை அழைத்துக் கொண்டு வங்கியின் மூத்த அதிகாரியை சந்தித்து தனது வேலையை ராஜினாமா செய்ய விரும்புவதாக தெரிவித்தார். வங்கி அதிகாரி ராஜாராம் மனைவியிடம், `உங்களது கணவர் நன்றாக சம்பளம் வரக்கூடிய வேலையை ராஜினாமா செய்துவிட்டு விவசாயம் செய்யப்போகிறார்’ என்று தெரிவித்தார்.

ராஜாராம் மனைவி தனது கணவரின் முடிவில் தனக்கும் விருப்பம் தான் என்று தெரிவித்துவிட்டார். இது குறித்து ராஜாராம் கூறுகையில், ”நான் வேலை பார்த்த வங்கி அதிகாரி என்னிடம் மேலும் 4 ஆண்டுகள் வேலை செய்துவிட்டு விருப்ப ஓய்வு எடுத்துக்கொள்ளலாம் என்று என்னிடம் தெரிவித்தார். உடனே நான் அவரிடம் வங்கியில் நான் இருக்கும் போது விவசாயம் தொடர்பான சிந்தனை வருகிறது. விவசாயத்தில் இருக்கும் போது வங்கி தொடர்பான சிந்தனை வருகிறது. என்னை நானே நன்றாக சிந்தித்த பிறகுதான் வேலையை ராஜினாமா செய்ய முடிவு செய்தேன்” என்று தெரிவித்தார்.

அதனை வங்கி தலைவரும் ஏற்றுக்கொண்டார். மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு விவசாயம் செய்யவேண்டும் என்று முடிவு செய்து முதல் கட்டமாக எங்களிடம் இருந்த நிலத்தில் 10 சதவீதம் மரங்களை நட்டோம்.

இதனால் சூரிய ஒளியின் தாக்கம், வெப்ப காற்றின் தாக்கம் பயிர்களை பாதிப்பது குறைந்தது. நாங்கள் வைக்கும் மரங்களின் இலைகள் நிலத்தில் விழுந்து உரமாகிறது. அதோடு நிலம் விரைவில் உலர்வது தடுக்கப்படுகிறது. ஆஸ்திரேலிய மரக்கன்றுகளை இறக்குமதி செய்து நிலம் முழுவதும் நடவு செய்தோம். அந்த மரங்களில் மிளகு செடிகளை நடவு செய்திருக்கிறோம். மரங்களுக்கு இடைப்பட்ட இடத்தில் அதிக அளவில் காலி இடம் இருந்தது.

அதில் தக்காளி போன்ற பல்வேறு வகையாக பயிர்களை பயிரிடுகிறோம். இது தவிர மஞ்சள், வெள்ளை முஸ்லி, திராட்சையும் பயிரிட்டு இருக்கிறோம். ஒரு ஏக்கரில் 4 முதல் 5 லட்சம் ரூபாயிக்கு மிளகு கிடைக்கிறது. கேரளாவில் மட்டும் தான் மிளவு விளையும் என்று சொல்வார்கள். ஆனால் நாங்கள் சத்தீஷ்கரில் மிளவு பயிரிட்டுக்கொண்டிருக்கிறோம். ஒரு முறை பயிரிட்டுவிட்டால் 100 ஆண்டுகளுக்கு மிளகு மகசூல் கொடுக்கும். இப்போது 700 ஏக்கரில் நாங்கள் விவசாயம் செய்து கொண்டிருக்கிறோம். எங்களது விளைபொருட்கள் அமெரிக்கா, ஜப்பான், வளைகுடா நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.70 கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெறுகிறது”என்று தெரிவித்தார்.

ராஜாராம்

6 முறை சிறந்த விவசாயி என்ற விருதை பெற்றுள்ள ராஜாராம் விவசாயத்திற்காக சொந்தமாக ஹெலிகாப்டர் ஒன்றையும் வாங்கி இருக்கிறார்.

நூற்றுக்கணக்கான ஏக்கரில் பூச்சி மருந்து தெளிக்க வேண்டியிருப்பதால் ஹெலிகாப்டர் மூலம் பூச்சி மருந்தை தெளிப்பதாக ராஜாராம் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் விவசாயத்தில் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படுவது சர்வசாதாரணம். ராஜாராமுடன் பக்கத்தில் உள்ள 30 கிராமத்தை சேர்ந்த 20 ஆயிரம் விவசாயிகள் இணைந்து செயல்படுகின்றனர். அவர்களுக்கு தேவையான தொழில் நுட்பத்தை ராஜாராம் கற்றுக்கொடுக்கிறார். ராஜாராம் 40 நாடுகளுக்கு சென்று விவசாயம் தொடர்பாக சொற்பொழிவாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *