
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில், தீவிரவாதிகள் பொது மக்களை சுட்டுக் கொன்றதை கண்டித்து பாஜக சார்பில் கோவை சிவானந்தா காலனி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கோவை, தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது,
நிச்சயம் பதிலடி கொடுப்போம்
“சர்வதேச சமூகத்தில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்ட நாடாக உள்ளது. இங்கு ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருக்கிறோம் என்றால் அதற்கு காரணமே மோடி தான். பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. ஆனால், இந்தியாவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எங்கள் மீது கை வைத்தால் நிச்சயம் பதிலடி கொடுப்போம் என்று இந்தியா உறுதியாக உள்ளது. காஷ்மீர் சம்பவத்துக்கு பிறகு, பிரதமர், ராணுவம் குறித்து தவறாக பேசுபவர்கள் திமுக ஆதரவு பெற்ற அரசியல் சக்தியாக இருக்கின்றனர். நாட்டை இரண்டாக பிளப்பதற்கோ, மக்களை மத ரீதியாக கொல்வதற்கோ பாஜக ஒருபோதும் அனுமதிக்காது.” என்றார்.

பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன், “மத்திய அரசு அறிவுறுத்தல் படி, தமிழக அரசு இங்கு சட்ட விரோதமாக தங்கி இருக்கக் கூடிய நபர்களை கண்டறிந்தார்களா. அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தார்களா.
கோவையில் கடந்த 2022-ம் ஆண்டு சிலிண்டர் வெடித்திருந்தால் 100 பேர் இறந்திருப்பார்கள். இதுதொடர்பாக தமிழக காவல் துறையிடமிருந்து எந்த அறிக்கையும் இல்லை. தமிழக அரசு அவர்களின் ஓட்டு வங்கிக்காக எந்த தேச விரோத செயல்களை யார் செய்தாலும் அனுமதிக்கக் கூடாது. தமிழக அரசு ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகள் மீது விரோத மனப்பான்மையில் இருக்கிறது.

தமிழகத்தில் பாகிஸ்தானியர்கள் தங்குகிறார்கள். கோவையில் சட்ட விரோதமாக வெளிநாட்டினர் தங்கி இருக்கக் கூடிய தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கெல்லாம் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.” என்றார்.