• May 5, 2025
  • NewsEditor
  • 0

‘நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது… சிறகை விரித்துப் பறப்போம்…’ என்று சினிமாவில் முன்னேறுவதைப்போல நிஜவாழ்க்கையில் ஜெயித்துக்காட்டிய சுந்தரி அக்கா, தற்போது நட்சத்திரமாகவே ஜொலிக்க ஆரம்பித்துவிட்டார் என்பதுதான் புது அப்டேட்.

ஆம், தனது மீன் குழம்பால் சென்னை மெரினாவையே மணக்கவைத்த சுந்தரி அக்கா, சமீபத்தில் சென்னை திருவெல்லிக்கேணியில் ஹைடெக் ரெஸ்ட்ரான்டை ஆரம்பித்து வியக்கவைத்தார். தற்போது, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் போட்டியாளராய் களமிறங்கி, சின்னத்திரை பிரபலம், ஆக ஆரம்பித்திருக்கிறார். தள்ளுவண்டியில் ஆரம்பித்த வாழ்க்கை, ஹைடெக் ரெஸ்ட்ராண்ட், யூடியூப் வைரல், டிவி பிரபலம் என அடுத்தடுத்து பிரபலமாகிக்கொண்டிருக்கிறார்.

சுந்தரி அக்கா

பாண்டிச்சேரி மீனவர் குடும்பத்தைச் சேர்ந்த சுந்தரி அக்கா ஐந்து வயதிலேயே தந்தையை இழந்தவர். அன்பூட்டி அரவணைப்பூட்டி வளர்த்தது அம்மாவும் பாட்டியும்தான். இட்லிக்கடை வைத்திருந்த பாட்டியைப் பார்த்துதான், சுந்தரி அக்காவுக்கு உணவுத் தொழிலில் ஆர்வம் வந்துள்ளது. இட்லி கடையில் பாட்டிக்கு உதவியாய் இருந்தவர், பின்னாளில் தானே ஒரு ஹோட்டல் அதிபர் ஆவோம் என்று நினைத்திருக்கவில்லை. ஆனால், காலமும் கடின உழைப்பும் நிகழ்த்திக்காட்டியது.

திருவல்லிக்கேணியில் வசிக்கும் தனது சித்தி வீட்டிற்கு வந்து செல்லும்போதுதான், கணவர் சேகரை சந்தித்துள்ளார். நட்பு காதலாகி பின்பு தம்பதிகளாகியுள்ளனர்.

கணவர் சேகரிடம் அப்பாவின் பாசத்தையும் நேசத்தையும் உணர்ந்தவருக்கு அந்த நேசமும் நீடிக்கவில்லை. இளம் வயதிலேயே கணவரையும் இழந்துவிட்டார். இரண்டு ஆண் குழந்தைகளுடன் வறுமையும் சூழந்துகொள்ள, கரம் கொடுத்தது தள்ளுவண்டி சாப்பாடுக்கடைதான். 20 வருடங்களுக்கு முன்பு சிங்கிள் பெண்மணியாக சென்னை மெரினாவில் தள்ளுவண்டியில்தான் ஹோட்டலை ஆரம்பித்தார். இவர் வைக்கும் சூடான சுவையான மீன் குழம்புக்கு வாடிக்கையாளர்களின் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது. மெரினா பீச் என்றாலே சுந்தரி அக்காவின் மீன் குழம்பு கடைதான் என பேச ஆரம்பித்தார்கள். பசியோடு வரும் வாடிக்கையாளர்களை வயிறார சாப்பிட வைத்து மனசார பாராட்ட வைக்கும் பெரும் பாசக்கார குணம்; 25 வருட ஓய்வில்லா கடின உழைப்புதான் சுந்தரி அக்காவை தற்போது சின்னத்திரை நட்சத்திரமாய் ஜொலிக்க வைத்துள்ளது.

புது ஹோட்டலில் சுந்தரி அக்கா

கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் 6-வது சீசன் நேற்று கோலாகலமாய் தொடங்கியது. நடிகை பிரியா ராமன், மதுமிதா, இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன், சீரியல் நடிகை ஷபானா, நடிகர்கள் கஞ்சா கருப்பு, உமர் லத்தீப், ‘பிக் பாஸ்’ ராஜு, செளந்தர்யா சில்லுகுரி உள்ளிட்டவர்களுடன் டஃப் ஃபைட் கொடுக்கும் போட்டியாளராய் களமிறக்கப்பட்டிருக்கிறார் சுந்தரி அக்கா.

‘குக் வித் கோமாளி’ என்றாலே பிரபலங்கள் கலந்துகொண்டிருந்த நிலையில், சாதாரண மக்களிலிருந்து ஒருவராய் சென்றிருப்பதால் சுந்தரி அக்காவுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்துகொண்டிருக்கிறது. சுந்தரி அக்கா ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னணி குறித்து நெருங்கிய உறவினர்களிடம் விசாரித்தோம்.

“சுந்தரி அக்காவுக்கு பலமுறை சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துக்க வாய்ப்பு வந்திருக்கு. ஆனா, தன்னைத் தேடி வர்ற மக்கள் ஏமாற்றமாகிடக் கூடாதுங்கிறதுக்காகத்தான், ஹோட்டல்ல இருந்து அவங்களே சாப்பாடு பறிமாறி உபசரிச்சாங்க. மக்கள் தேடி வர்றதும் அவங்களோட கைப்பக்குவத்துக்காகவும் அன்போட பரிமாறும் அந்தக் கைகளுக்காகவும்தான். அதனாலதான், சுந்தரி அக்காவும் தனக்கு வந்த வாய்ப்புகளையும் தவிர்த்துட்டாங்க. இப்போ, கலந்துக்கிட்டது அவங்களோட பசங்க என்கரேஜ் பண்ணினதுனால்தான்.

சுந்தரி அக்கா

கணவரை இழந்து அவ்ளோ கஷ்டத்திலும் தன்னோட ரெண்டு மகன்களையும் படிக்கவெக்க வைராக்கியமா உழைச்சாங்க. அந்த 20 வருட உழைப்புக்கு இப்போ பலனும் கிடைச்சிருக்கு. மூத்த மகனை ஹோட்டல் மேனேஜ்மென்ட்டும் ரெண்டாவது மகனை ஷிப்பிங்கும் படிக்க வெச்சாங்க. ரெண்டு மகன்களும் நல்லா படிச்சு இப்போ சுந்தரி அக்காவுக்கு உறுதுணையா இருக்காங்க.

மருமகள்கள் சப்போர்ட்டும் அதிகம். எல்லோருமே மெரினா பீச் கடை, திருவல்லிக்கேணியில் ஆரம்பிக்கப்பட்ட புது ஹைடெக் சுந்தரி அக்கா ரெஸ்ட்டாரன்ட்டையும் கவனிச்சுக்கிறாங்க. ஆனா, மீன் வாங்குறது, சமைக்கிறது எல்லாமே சுந்தரி அக்காதான். ‘எங்களுக்காக நீ உழைச்சது போதும்மா. உன் திறமை இன்னும் வெளிச்சம் பெறணும்’னு சொல்லி மகன்கள்தான் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு ஓகே சொல்ல வெச்சிருக்காங்க. ஏற்கனவே, எங்க சுந்தரி அக்கா ரொம்ப பிஸி. இப்போ, ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியிலும் கலந்துக்கிறதால பிஸியோ பிஸிதான்.

சுந்தரி அக்கா தள்ளுவண்டிக்கடை

நிகழ்ச்சியில் கலந்துக்கிற போட்டியாளர்கள் புதுப்புது டிஷ் எல்லாம் செய்து அசத்துறாங்க. ஆனா, எங்க அக்கா பாரம்பரியமான சமயலை செய்து நிச்சயம் வெற்றி பெறுவாங்கங்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கு. அவங்களோட சமையலும் மன உறுதியுமே ஜெயிக்க வெச்சுடும். ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்காக ஐந்து மாசத்துக்கு இப்போ கான்ட்ராக்ட் போட்டிருக்காங்க. அடிக்கடி ஷூட்டிங் போனாலும் கடை வேலைகள் பாதிக்கப்படாம சுந்தரி அக்காதான் மீன், காய்கறி எல்லாம் வாங்கிட்டு வர்றாங்க. அவங்க வழிகாட்டுதலை பிள்ளைங்களும் ஃபாலோ பண்றாங்க. எந்த விதத்திலும் நம்பி சாப்பிட வர்ற மக்களை பாதிக்காது. அதே தரம்; அதே டேஸ்ட்டு நிச்சயம் தொடரும்” என்கிறார்கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *