தமிழ்நாட்டில் விரைவில் 6 ராஜ்யசபா இடங்கள் காலியாக உள்ளன. இதனால் அரசியல் கட்சியினர் இடையே ராஜ்யசபா இடம் யாருக்கு என்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது தே.மு.தி.க. அ.தி.மு.க-வுடன் அங்கம் வகித்த தே.மு.தி.க-வுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் வழங்கப்படும் என அ.தி.மு.க வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் இருந்த போது, அன்புமணிக்கு ராஜ்யசபா சீட்டை அ.தி.மு.க. ஒதுக்கியது. அன்புமணியின் பதவிக்காலம் முடிவடைவதால் அந்த இடத்தை பெற தே.மு.தி.க. திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ராஜ்ய சபா சீட் குறித்து தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறும்போது, “அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தபோதே தே.மு.தி.க.வுக்கு ராஜ்யசபா சீட் என கையெழுத்தானது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் தே.மு.தி.க.வின் ராஜ்யசபா வேட்பாளர் யார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்படும். அ.தி.மு.க. உடனான கூட்டணியில் தே.மு.தி.க தொடர்கிறது” என்றார்.
ஆனால், அ.தி.மு.க. சார்பில் “இதுவரை தே.மு.தி.க.விற்கு ராஜ்யசபா சீட் குறித்து வாக்குறுதி அளிக்கவில்லை. சீட் குறித்து அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்றே கூறப்பட்டது.
கடந்த ஆண்டு மார்ச் 20-ந்தேதி அ.தி.மு.க.- தே.மு.தி.க. இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தில் 5 எம்.பி. தொகுதிகள் மட்டுமே ஒதுக்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் எந்த இடத்திலும் ராஜ்யசபா சீட் பற்றி குறிப்பிடப்படவில்லை” என அ.தி.மு.க தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருக்கும் தே.மு.தி.க-வின் பொருளாளர் எல்.கே.சுதீஷ், “தே.மு.தி.க-வுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக அ.தி.மு.க உறுதியாக வாக்குறுதி கொடுத்தது. இது முழுக்க முழுக்க உண்மை. நேரம் வரும்போது அனைத்தையும் வெளிப்படையாகச் சொல்வேன்.

அ.தி.மு.க அளித்த உத்தரவாதத்தால் தான் நான் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. இதற்கு முன் நான் 2009-ல் கள்ளக்குறிச்சியிலும் 2014-ல் சேலத்திலும் போட்டியிட்டேன். சேலத்தில் எனக்காக மோடி பிரச்சாரம் செய்தார். 2019-ல் மீண்டும் பா.ஜ.க கூட்டணியில் கள்ளக்குறிச்சியில் போட்டியிட்டேன். 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் யோசிக்கிறேன்.” என்றார்.