
புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானில் இருந்து அனைத்து பொருட்கள் இறக்குமதிக்கும் இந்தியா தடை விதித்துள்ளது. இருதரப்பு கடித போக்குவரத்து, இந்திய துறைமுகங்களில் கப்பல்கள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலையடுத்து, பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது. இதுதவிர, விசா ரத்து, அட்டாரி-வாகா எல்லை மூடல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், இந்த தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை விடுத்தார்.