
நேற்று அதிமுக செயற்குழு கூட்டம், இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மற்றும் பாஜகவின் மையக்குழு கூட்டம் என்று இப்போதே தேர்தல் பரபரப்பு தமிழ்நாட்டை பற்றிக் கொண்டுவிட்டது.
பிற கட்சிகளுமே ஆலோசனைகள், கூட்டங்கள், பேச்சுகள் என தங்களது பணிகளை மும்முரமாக செய்து வருகின்றனர்.
‘நூலிழையில்…’ – எடப்பாடி பழனிசாமி
நேற்று நடந்த அதிமுகவின் செயற்குழு கூட்டத்தில், அதிமுகவின் பொதுசெயலாளர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “கடந்த சட்டசபை தேர்தலில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை அதிமுக இழந்தது. இந்த முறை அப்படி நடக்காது.
அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை மக்கள் இன்னும் மறக்கவில்லை. சட்டம் ஒழுங்கும் நமது ஆட்சியில் சீராக இருந்தது. அதனால், மக்கள் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
அடுத்த ஆட்சி அதிமுக உடையது தான். நாம் அடுத்த முறை இங்கு கூடும்போது அதிமுக ஆட்சி தான் இருக்கும் என்று உறுதியாக சொல்கிறேன்” என்று பேசிய அவர், “அதிமுக தலைமையில் தான் வலுவான கூட்டணி அமையும்” என்பதையும் மறக்காமல்… மறைக்காமல் பதிவு செய்திருக்கிறார்.
“உருட்டல், மிரட்டல் வேலைக்கு ஆகாது” – ஸ்டாலின்
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினோ, “பா.ஜ.க. தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்ற நினைக்கிறது. அதற்கு அனைத்து விதமான அச்சுறுத்தலையும் செய்து அ.தி.மு.க.வை அடக்கி விட்டது.
பழனிசாமிக்கும் வேறு வழியில்லை. பா.ஜ.க. கூட்டணியை ஏற்றுக் கொள்ளாவிட்டால் சொந்தக் கட்சியில் அவர் தலைமைக்கே சிக்கல் வரும் என்று பயப்படுகிறார். அதனால் பா.ஜ.க. கூட்டணியை ஏற்றுக்கொண்டு விட்டார்.
நாம் எல்லாக் காலக்கட்டத்திலும் இதுபோன்ற சோதனைகளை எதிர்கொண்ட இயக்கம்தான். அரசியல் ரீதியாக நம்மை வெல்ல முடியாதவர்கள், இதுபோன்ற மிரட்டல்கள் மூலமாக அசிங்கப்படுத்த நினைப்பார்கள்.
அவர்களது அரட்டல், மிரட்டல், உருட்டல் அனைத்துக்கும் உண்மையான காரணம் என்ன என்பது மக்களுக்குத் தெரியும். எனவே, பா.ஜ.க.வின் அச்சுறுத்தலை, அரசியல் ரீதியாக நாம் எதிர்கொள்வோம்” என்று பேசியிருக்கிறார்.

பாஜகவின் கூட்டத்தின் ‘மையம்’ என்ன?
பாஜக மையக்குழு கூட்டத்தில், பூத் கமிட்டி, கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவது, அதிமுக – பாஜக கூட்டணி உள்ளிட்ட 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து பேசப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டம் பாஜக தேசிய தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் ஜெ.பி நட்டா தலைமையில் நடந்துள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன், பாஜக எம்.எல்.ஏ வானதி ஶ்ரீனிவாசன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர். ஆனால், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஏனோ ஆப்சென்ட்.
திமுக கூட்டணியின் நிலை என்ன?
அவ்வப்போது பூசல்கள், விரிசல்கள் உண்டாகினாலும், ‘நண்பேன்டா’ என்ற தொனியில் திமுக கூட்டணி பலமாக உள்ளது. இதை திரும்ப திரும்ப திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் சொல்லி வருகின்றனர்.
இப்போதைக்கு திமுகவில் என்ன பிரச்னை என்றால் துரைமுருகன், பொன்முடி போன்ற அமைச்சர்களின் ரத்தான வழக்குகள் மீண்டும் தூசி தட்டி எழுப்பப்படுகிறது.
செந்தில் பாலாஜி மோசடி வழக்கும், அவருக்கு மீண்டும் கொடுக்கப்பட்ட அமைச்சர் பதவி எவ்வளவுக்கு எவ்வளவு சர்ச்சையை கிளப்பியதோ, அதே அளவு சர்ச்சையை பொன்முடியின் பேச்சும் கிளப்பியது.

சர்ச்சை பேச்சு பொன்முடியோடு மட்டும் நின்றுவிடவில்லை. அமைச்சர் துரைமுருகனின் பேச்சும் பெரும் கண்டனத்தை கிளப்பியது.
உடனுக்குடன் நடவடிக்கை என முதலில் பொன்முடியின் கட்சி பதவி பறிப்பு, பின்னர், அவரது ஆட்சி பதவி பறிப்பு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், இது திமுகவிற்கு பெரும் மைனஸ் தான்.
‘அமைச்சர்கள் அடிக்கடி சென்னையில் இருக்காமல் தங்களது ஊருக்கு செல்ல வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். இது தேர்தல் பணியில் இன்னும் வேகம் காட்ட வேண்டும் என்ற திமுக தலைமையின் யோசனை காட்டுகிறது.
அதிமுகவின் ‘மெகா’ கூட்டணி!
“தற்போது அதிமுக – பாஜக கூட்டணி அமைந்துள்ளது. இனி மேலும் சில கட்சிகள் இணைந்து அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும்” என்று நேற்று பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக கூட்டணியில் கட்சிகளை இணைக்க பேச்சுவார்த்தை நடந்துவருகிறது என்பதை இந்தப் பேச்சு தெளிவாகக் காட்டுகிறது. ‘அதிமுக தலைமையில்’ என்று எடப்பாடி பழனிசாமி அழுத்தமாக கூறும்போதே, ‘ஆட்சியில் பாஜகவிற்கு பங்கு இல்லை’ என்கிற அவரது நிலைபாட்டை காட்டுகிறது.
இந்த நிலைபாட்டை கொஞ்சம் அவர் மாற்றினாலும், அதிமுக வாக்குகளை அள்ளுவதில் சிக்கலை சந்திக்கும்.

பாஜக மையக்குழு
‘நாங்கள் மட்டும் சும்மாவா?’ என்று பாஜகவின் கூட்டம் நடந்து முடிந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி பல்டி அடித்தால் என்ன செய்வது என்று பாஜக தரப்பு நிச்சயம் மாற்று யோசனையை வைத்திருக்கும். இருந்தாலும், இப்போதைக்கு அவர்கள் அதிமுகவை விடுவதாக இல்லை.
இனி என்னென்ன காட்சிகள் தமிழ்நாட்டில் அரங்கேறப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்!