
பனாஜி: கோவாவில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தது, 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த துயர சம்பவத்தை தொடர்ந்து, அடுத்த மூன்று நாட்களுக்கு அரசு விழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து பொது நிர்வாகத் துறையின் துணைச் செயலாளர் ஷ்ரேயாஸ் டி சில்வா வெளிட்டுள்ள சுற்றறிக்கையில்,. ‘ஸ்ரீகாவோவில் ஸ்ரீலைராய் தேவி கோயிலில் ஜாத்ரா திருவிழாவில் ஏற்பட்ட துயரமான கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள், அவர்களின் குடும்பத்தினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக அடுத்த மூன்று நாட்களுக்கு அரசு சார்பில் நடக்க இருக்கும் அனைத்து நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்களையும் ரத்து செய்யவோ அல்லது ஒத்திவைக்கவோ அறிவுறுத்தப்படுகிறது. அனைத்து துறைத் தலைவர்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளும் இந்த உத்தரவை அமல்படுத்துவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.