
புதுடெல்லி: பாகிஸ்தானில் இருந்து நேரடியாக அல்லது மறைமுகமாக என அனைத்துவித இறக்குமதிகளுக்கும் இந்தியா உடனடி தடைவிதித்துள்ளதாக வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல் இந்திய துறைமுகங்களிலும் பாகிஸ்தான் கப்பல்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பின் படி, “மறுஉத்தரவு வரும் வரை பாகிஸ்தானில் உற்பத்தியாகும் பொருட்கள் அல்லது அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு உடனடியாக அமலாகும் வகையில் தடைவிதிக்க ஏதுவாக வெளிநாட்டு வர்த்தக கொள்கையில் புதிய திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொதுநலனை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.