
2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தரப்பில் வெற்றி வேட்பாளராக பார்க்கப்பட்டவர் கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை. எப்படியும் ஜெயித்தாக வேண்டும் என்பதற்காக, கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் சரியாகப் பயன்படுத்திய அண்ணாமலை, கோவை தொழில்துறையினருக்கும் வாக்குறுதிகளை ஏராளமாக வாரி வழங்கி இருந்தார்.
மத்திய அரசில் செல்வாக்கான நபராக இருப்பதால் இவர் வெற்றிபெற்றால் நமக்கான பிரச்சினைகள் தீரும் என்ற நம்பிக்கையில், கோவை தொழிலதிபர்கள் சிலர், மாநிலத்தை ஆளும் திமுக-வின் பொல்லாப்பு வருமே என்றெல்லாம் கவலைப்படாமல் அண்ணாமலைக்கு ஆதரவாக நின்றார்கள். சிலர் ஆளும் கட்சியின் நெருக்கடிகளையும் சமாளித்து அண்ணாமலைக்காக வாக்குச் சேகரித்தார்கள்; பலர் நிதியுதவியும் தந்தார்கள். ஆனாலும், தேர்தல் முடிவுகள் இவர்களின் எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக அமைந்து போனது.