
இலங்கை வல்வெட்டித் துறையைச் சேர்ந்த தர்மதாஸ் (சசிகுமார்), மனைவி வசந்தி (சிம்ரன்), மகன்கள் நிது, முள்ளி (மிதுன், கமலேஷ்) ஆகியோருடன் படகில்தப்பித்து ராமேஸ்வரம் வருகிறார். அங்கிருந்து சென்னை வரும் அவர்கள், வசந்தியின் சகோதரர் (யோகிபாபு) மூலம் புதிய வாழ்க்கையைத் தொடங்குகின்றனர். இலங்கை வாழ்வை மறந்து சந்தோஷத்துடன் வாழத் தொடங்கும்போது, ராமேஸ்வரத்தில் நடக்கும் ஒரு குண்டுவெடிப்பால், தர்மதாஸின் குடும்பத்தை போலீஸ் தேடுகிறது. இதில் அவர் குடும்பத்துக்கு என்ன ஆகிறது என்பது படத்தின் கதை.
இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரும் ஒரு குடும்பத்தின் நிலையை, இயல்பாக, அழகாகப் படமாக்கியிருக்கும் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்க்கு ஒரு பூங்கொத்து. பிழைப்புத் தேடி இன்னொரு நாட்டுக்குச் சட்ட விரோதமாக வருவது என்பது கொடூரம். அப்படி வரும் குடும்பத்தின் கதைக் களத்தை, மெல்லிய நகைச்சுவையையும் மனித மனங்களையும் சமவிகிதத்தில் கலந்துபடமாக்கி இருப்பது ரசிக்க வைக்கிறது. கதையில் வரும் சின்ன சின்னக் கதாபாத்திரங்களுக்கு சிறிய பின் கதை வைத்திருப்பதும் கதையோட்டத்துக்கு உதவியிருக்கிறது.