
புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உத்தரவின் பேரில், லஷ்கர் -இ-தொய்பா உருவாக்கியுள்ளது என தேசிய புலனாய்வு முகமை தனது முதல் கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த மாதம் 22-ம் தேதி நடைபெற்ற தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் குறித்து என்ஐஏ காஷ்மீரின் குப்வாரா, புல்வாமா, சோபூர், அனந்நாக் மற்றும் பாரமுல்லா ஆகிய பகுதிகளில் சோதனை நடத்தி 2,800 பேரிடம் விசாரணை நடத்தியது. நேற்று வரை 150 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். பஹல்காமில் தீவிரவாதிகளின் நடமாட்டத்தை கண்டறிய சிசிடிவி வீடியோ பதிவுகளும் சேகரிக்கப்பட்டுள்ளன.